05 டிசம்பர் 2015

சென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன?

சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது.

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப் நிலைகுலையச் செய்துள்ளது என செண்டர் ஃபார் சயன்ஸ் அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நரெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இயற்கையான நீர்நிலைகளை பராமரிப்பது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாதது, தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முக்கியமான காரணம் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை மட்டுமல்லாமல் டில்லி,கொல்கத்தா, மும்பை, ஸ்ரீநகர் ஆகிய நகரங்களும் இத்தகைய நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இயற்கை நீர்நிலைகளும், வடிகால்களும் முறையாக பராமரிக்கப்பட்டிந்ருதால், சென்னை இப்படியான வரலாறு காணாத நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம் என அந்த மையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கடந்த 1980களில் சென்னையில் 600 நீர் நிலைகள் இருந்தன, ஆனால் இப்போது அதில் மிகச் சொற்பமானவையே எஞ்சியுள்ளன என்றும் சுனிதா நரெயின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நீர்நிலைகள் மற்றும் வடிகால் அமைப்புகளை பேணிப் பராமரிக்காத நிலையில் பருவநிலை மாற்றத்தால் அசாதாரணமான அளவுக்கு மழை பெய்யும்போது, நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது எனவும் அந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.

நீர்நிலைகள் எப்படி சீரழிந்து போயுள்ளன என்பதற்கு போரூர் ஏரி ஒரு உதாரணம் எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நீர்நிலைகள், நிலத்தடி நீர் மீண்டும் ஊறுவதற்கும், வெள்ளம் ஏற்படும் போது அதை சமாளிப்பதற்கும் பெரும் உதவியாக இருந்திருக்கும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.

ஈரநிலப்பகுயில் எப்படி கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றன எனும் கேள்விக்கு ஒருநாளும் பதில் கிடைத்தது இல்லை எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நிலங்கள் நகர நிலச் சட்டங்களின் கீழ் மிகவும் அரிதாகவே பதியப்படுகின்றன எனவும், அதன் காரணமாக பலருக்கு அது தெரியவருவதில்லை எனவும் சுனிதா நரெயின் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

அனுமதி கோரி மனுக்கள் வரும்போது மேலோட்டமாக நிலங்களை மட்டுமே அதிகாரிகள் பார்க்கிறார்கள், அதிலுள்ள நீராதாரங்களைப் பார்ப்பதில்லை, எனவே பேராசை பிடித்த கட்டுமான நிறுவனங்கள் அதை தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன எனவும் சி எஸ் இயின் அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழக அரசின் ஆவணங்களின்படி கடந்த 1980களில் 19 பெரிய ஏரிகளின் பரப்பளவு 1,130ஹெக்டேர்களாக இருந்தது, 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் 645 ஹெக்டேர்களாக சுருங்கியுள்ளன, அதன் காரணமாக அந்த ஏரிகளின் கொள்ளளவு குறைந்து போயின என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

சென்னையின் பல இடங்களில் மழைநீர் கால்வாய்களில் குப்பைக் கூளங்களால் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன, அவை உடனடியாக தூர்வாரி சரிசெய்யப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

சென்னை மாநகரில் 2,847 கிமீ நீளத்துக்கு சாலைகள் உள்ள நிலையில், மழைநீர் கால்வாய்கள் 855கிமீ மட்டுமே உள்ளன என்றும், இதுவே பெருமழையின் போது, சாலைகளில் நீர் ஓடுவதற்கும் தேங்கி நிற்பதற்கும் காரணமாகின்றன எனவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

மனிதர்களால் உருவாக்கப்படும் வடிகால் அமைப்புகள், ஒருநாளும் இயற்கை வடிகால் அமைப்புகளுக்கு மாற்றாக இருக்க முடியாது எனவும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் கூவம், அடையாறு போன்ற நதிகளை இணைக்கும் இயற்கை கால்வாய்களும், வடிகால்களும் இருப்பதை தமது ஆய்வுகள் காட்டுகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

உதாரணமாக, நகரின் 75 குளங்களில் நீரின் அளவு உயர்ந்து கொள்ளளவைக் கடக்கும்போது, அந்த நீர் கூவத்தில் கலக்கவும், அதேபோல் 450 குளங்களில் உள்ள உபரி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு உயரும்போது அதிலுள்ள உபரி நீரும் அடையாற்றில் கலப்பதற்கு வசதிகள் இருந்தன என்று அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

@ BBC

01 மே 2015

மே தினம் உருவானது எப்படி?

 
        1886-ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படு கிறது. இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் தங்களது இன்னுயிரை இதற்காக விலையாக தரவேண்டியிருந்தது. தொழிலா ளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண் டனை விதிக்கப்பட்டது.

        1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கார்மிக் ஹார்வெஸ்டர் என்ற கம்பெனியின் முன்னால் திரண்டிருந்த 500 தொழிலாளர்களிடையில் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் உரையாற்றிக் கொண்டிருந்தார். அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். ஐவர் படுகாயமுற்றனர். பலர் தாக்கப்பட்டனர். இந்த அடக்கு முறையை கண்டித்து அன்று இரவு, சிகாகோ நகரின் மையப் பகுதியில் உள்ள ஹே மார்கெட் என்ற இடத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தோழர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ், ஆல்பர்ட் பார்ஸன்ஸ், சாமுவேல் பீல்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டதால் இறுதி கட்டத்தில் சுமார் 200 தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர். சாமுவேல் பீல்டன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜான்போன் பீல்டு என்ற அதிகாரியின் தலைமையில், 180-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கூட்டத்தினரை வளைத்து உடனடியாக கலைந்து போகும்படி உத்தரவிட்டனர். சிறிது நேரத்தில் அங்கு கலவரம் வெடித்தது. அப்போது திடீரென்று காவல்துறை யினர் மீது ஒரு கையெறி குண்டு வந்து விழுந்தது. அதில் ஒருவர் உயிரிழந்தார். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுட்டனர். இதில் பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

உரிமைக் குரல்

            இந்த கலவரத்தை காரணம் காட்டி தொழிலாளர்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். 1886-ம் ஆண்டு மே 1-ம் தேதி கைது செய்யப் பட்டு ஒரு ஆண்டிற்கு மேலாக நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம்தேதி அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். மேற்கண்ட நான்கு தோழர்களுடன், அடால்ப் பிட்சர், மைக்கேல் ஸ்வார்ப், சாமுவெல் பீல்டன், லூயிஸ் லிங்க் மற்றும் ஆஸ்கர் நீப் ஆகிய தோழர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஆஸ்கர் நீப் என்ற தோழருக்கு 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற தோழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. இதன் விளைவாக ஸ்வார்ப் மற்றும் பீல்டன் ஆகியோருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிட்சர், ஆகியோர் 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ந்தேதியன்று தூக்கிலிடப்பட்டனர். லூயிஸ் லிங்க் என்ற தோழர் சிறையிலேயே தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார்.

நீதிமன்றத்தில் உரிமைக் குரல்

          சிகாகோ நகர தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை கேட்டு நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய தோழர்களில் முதன்மையானவர் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் ஆவார். நீதிமன்றத்தில் இவர் மீது குற்றம் சுமத்தி வாதாடிய அரசு வழக்குரைஞர், ‘ஆயிரம் ஆயிரம் தொழிலாளர் இவர் பின்னால் அணிதிரண்டதே இவர் செய்த முதன் மையான குற்றம்’ என வாதிட்டார். ஆகஸ்ட் ஸ்பைஸோ, ‘இந்த குற்றச்சாட்டே தனக்கு தற்காப்பு வாதமாக அமைந்துவிட்டது” என எதிர்வாதம் செய்தார். காவலர்கள் மீது தான் குண்டு வீசியதாக அரசு தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது இதன்மூலம் பொய் என நிரூபிக்கப்பட்டுவிட்டதாக வாதிட்டார். காவலர்கள் மீது வீசப்பட்ட குண்டு தன்னால் உண்மையில் வீசப்பட்டிருந்தால் அதை நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்வதில் தனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது என்று தைரியத்தோடு  உரைத்தார்.

         மற்றொரு தோழர் ஆல்பர்ட் பர்ஸன் நீதிமன்றத்தில் வாதாடுகையில், மரம் கனிகளால் அறியப்படுவதைப் போல் தொழிலாளர்கள், போர்க்குணம் மற்றும் தியாகத்தின் மூலம் தங்களது உண்மையான தலைவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள். தங்களுக்கு அளிக்கப்படும் மரணதண்டனை தீப்பொறியாக உலகம் முழுவதும் பரவும் என ஆர்ப்பரித்தார்.

            ஆஸ்கர் நீபி என்ற தோழர், கலவரம் விளைவிக்கப்பட்ட இடத்தில் நடந்த கூட்டத்திற்கு தான் தலைமை வகித்தேன் என்ற உண்மையை இந்த நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்வதாகவும், 8 மணி நேரம் வேலை கேட்டு போராடிய தொழிலாளர்களுக்கு நான் தலைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுவதாகவும் உரைத்தார்.

         அடால்ப் பிட்சர் என்ற தோழர் நீதி மன்றத்தில் உள்ள காவலர்களைப் பார்த்து எள்ளி நகையாடி இவர்களா சட்டத்தின் காவலர்கள்? இவர்கள் திருடர்கள். அடுத்தவர்களின் சொத்தினை அபகரிப்பவர்கள் என எக்காளமிட்டார்.

          தோழர் மைக்கேல் ஸ்வாப், நீதி மன்றத்தில் தங்களுடைய நோக்கம் கலகம் விளைவிப்பது அல்ல, சோசலிசத்தை அடைவதே என்று பிரகடனப்படுத்தினார்.

         தோழர் ஜார்ஜ் ஏங்கல், தொழிலாளர்களின் தேவை, வேலை, ரொட்டி, அமைதி, இவை மூன்றுதான். இதுகூட இவர்களுக்கு இன்று உத்தரவாதப்படுத்தப் படவில்லை என்று முழக்க மிட்டார்.

           தோழர் சாமுவேல் பீல்டன் நீதி மன்றத்தில் உரையாற்றுகையில், நாங்கள் சோசலிசத்தைப் பேசினால் சிலர் பயப்படுகிறார்கள் நாங்கள் பிறரின் சொத்துக்களை சோசலிசத்தின் பெயரில் அபகரித்து விடுவோம் என நினைக் கிறார்கள். ஆனால் சோசலிசத்தின் நோக்கம் அது அல்ல. யார் ஒருவர் இன்னொருவருடைய சொத்துக்களை திட்டமிட்டு பறிக்கிறார்களோ அதை தடுத்து நிறுத்தக்கூடிய அமைப்பை உருவாக்குவதுதான் சோசலிசம் என விளக்கினார்.

முதலாளித்துவத்திற்கு சாவுமணி!

        சுரண்டப்படும் தொழிலாளர்களை திரட்டி, சோசலிச உணர்வுகளை ஊட்டி முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக கிளர்ந்தெழச் செய்வதை ஒடுக்கவே, காவல்காரர்களே குண்டு வீசி சதி செய்து, தங்கள் மீது குற்றம் சுமத்தி மரண தண்டனை வழங்க திட்டமிட்டுள்ளார்கள் என்று தெரிந்திருந்தும், மே தின தியாகிகள் சிறிதும் அஞ்ச வில்லை. 

     நீதிமன்றத்தில் வாதாடுவது மூலம் தாங்கள் தண்டனையிலிருந்து தப்பமுடியும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்தக் கொலைக் களத்தையும் பிரச்சார மேடையாக பயன்படுத்தி முதலாளித்துவத்தின் முகமூடியை கிழித்தெறிந்து, சோசலிசத்தின் மேன் மையை தூக்கிப் பிடித்து, நீதிமன்றத்தில் அவர்கள் ஆற்றிய உரையும், ஆதிக்க சக்திகளின் திணறலையும், வரலாற்று ஆவணமாக மாற்றிய அவர்களின் வீரத்தை போற்றி பாராட்ட வார்த்தை களே இல்லை. 
    அவர்கள் எதிர்பார்த்தது போலவே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீரத்துடன் போராடிய அந்த தோழர்களுக்கு கிடைத்த மரண தண்டனையே முதலாளித்துவத்திற்கு அடிக்கப்பட்ட முதல் சாவு மணியாக மாறியது. அவர்களின் மரணமே உலகத் தொழிலாளர்களை ஒன்று சேர்த்திடும் மகத்தான சக்தியாக இன்று உருவெடுத்து உள்ளது.
மே தின தியாகிகள் வாழ்க!
நன்றி: NFPE
 
குறிப்பு: மீள் பதிவு

20 மே 2014

பா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா?

1984-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய வெற்றியினை நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெற்றிருக்கிறது. அதே சமயம் காங்கிரஸ் வரலாற்றிலேயே மிகப்பெரும் தோல்வியை சந்திருக்கிறது.

1984-ல் காங்கிரஸ் பெற்ற வெற்றியை விட இது சிறப்பு வாய்ந்தது எனலாம். காரணம் அப்போது காங்கிரசின் வெற்றி இந்திரா காந்தியின் மரணத்தின் மூலம் கிடைத்த அனுதாப ஓட்டுக்களால் கிடைத்த வெற்றி.


பாரதிய ஜனதா கட்சியின் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் காங்கிரஸ் எதிர்ப்பு அலையா? அல்லது மோடி ஆதரவு அலையா? என்ற விவாதம் எழுந்துள்ளது.

காங்கிரஸ் எதிர்ப்பு அலை மட்டுமே காரணம் என்றால் காங்கிரஸ் கூட்டணி மட்டுமே மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கவேண்டும். 

ஆனால் இந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடாத சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகளும் பா.ஜ.க வால் பந்தாடப் பட்டுள்ளன.

எனவே காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த மிகப்பெரும் வெறுப்பு மட்டுமல்லாமல்  மோடி மீது மக்களுக்கு உள்ள மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஆகிய இரண்டும் சேர்ந்தே இப்பெரு வெற்றிக்கு காரணம் என எண்ணத் தோன்றுகிறது.

ஜெயலலிதா மற்றும் மம்தாவின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைப்பதற்கு மோடி புண்ணியம் செய்திருக்கவேண்டும்.

பகவான் வரம் கொடுத்துட்டார். மோடி பயன்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

06 மே 2014

பாடலிலிருந்து இசையை பிரிக்க மென்பொருள்!

இன்னிசை நிகழ்ச்சிகளில் நாம் பார்த்திருப்போம், வாத்தியக் கருவிகள் அதிகம் இல்லாமலேயே பின்னணி இசை அருமையாக ஒலிக்கும். 

குறைந்த பட்ஜெட்டில் இசை நிகழ்சிகள் நடத்துபவர்கள் karaoke CD மூலமாக இசையை ஒலிக்க  செய்கிறார்கள். பாடகர்கள் பாடலை பாடுகிறார்கள். 


இது போன்ற karaoke CD க்களை நமக்கு பிடித்த பாடல்களைக் கொண்டு நாமே உருவாக்க ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது. 

 Audacity  என்னும் இம்மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். 

பின்பு இசையை பிரிக்க வேண்டிய பாடலை Audacity ல் திறந்துகொள்ளுங்கள். 


அதில் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளவாறு Effect மெனுவில் Vocal Remover என்பதை தேர்வுசெய்து பாடலில் உள்ள குரலை நீக்கிவிடலாம். பின்னர் File மெனுவில் Export ஐ அழுத்தி இசையை சேமித்துக்கொள்ளலாம்.

இம்மென்பொருளில் பாடலிலிருந்து இரைச்சலை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. 

பயன்படுத்திப்பாருங்கள் ...இது எத்தனை அருமையான இலவச மென்பொருள் என்பது தெரியும்.

01 ஏப்ரல் 2014

மரங்களின் தாய் பிறந்தநாள் இன்று!

மரக்கன்று நடுவது சுற்றுச்சூழலை மேம்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேநேரம், மரக்கன்று நடுதல் மட்டுமே சுற்றுச்சூழலை முழுமையாகக் காப்பாற்றிவிடுமா என்று கேட்டால், இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால், இந்த மரக்கன்று நடுதலைச் சற்றே வேறுபட்ட முறையில் நடைமுறைப்படுத்தி, வெறும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் செயல்பாடாக மட்டுமில்லாமல் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாக, பெண்ணுரிமைக்குக் குரல் கொடுப்பதாக, ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டமாக மாற்றியவர் மறைந்த சுற்றுச்சூழல் போராளி வங்காரி மாத்தாய். அதைச் சாதித்துக் காட்டியது, அவர் தொடங்கிய பசுமை பட்டை இயக்கம் (Green belt movement).


கென்ய தலைநகர் நைரோபிக்கு வடக்கே, மாபெரும் கென்ய மலையின் பார்வையில் இருக்கும் மாகாணத் தலைநகரமான நையேரியில் 1940ஆம் ஆண்டு வங்காரி மாத்தாய் பிறந்தார். கென்யாவைச் சேர்ந்த பெரும்பாலான ஆப்பிரிக்கப் பெண்களைப் போலன்றி, அவர் உயர்கல்வி கற்றார். இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளை அமெரிக்காவில் நிறைவு செய்தார். 1971-ல் கென்யாவிலேயே முதல் டாக்டர் பட்டம் பெற்ற பெண்ணாக ஆனார், தொடர்ந்து நைரோபி பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியையாகவும் மாறினார்.

ஓர் உயிரியலாளராகக் காடு அழிப்பும், மண்ணரிப்பும் கிராமப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுத்துவதை அவர் நேரில் கண்டுணர்ந்தார். பெரும்பாலும் உடலுழைப்பைச் செலுத்தும் பெண்களிடம், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. கால்நடைகளின் மேய்ச்சல் நிலம் அழிக்கப்பட்டிருந்தது. விறகுக்கான மரங்களைத் தேடி மேலும்மேலும் தொலைதூரத்துக்குப் பெண்கள் அலைய வேண்டியிருந்தது.

1977-ம் ஆண்டு தன் பேராசிரியை பதவியை மாத்தாய் துறந்தார். அந்த வருட உலகச் சுற்றுச்சூழல் தினம் (ஜூன் 5-ம் தேதி) அன்று தன் வீட்டின் புழக்கடையில் ஒன்பது மரங்களை நட்டு, பசுமை பட்டை என்ற இயக்கத்தை அவர் தொடங்கினார். ஆப்பிரிக்கக் காடுகளை மீட்டெடுப்பது, காடு அழிப்பினால் ஏற்பட்ட வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதே அந்த இயக்கத்தின் நோக்கம். இதன்மூலம் 30 வருடங்களில் மூன்று கோடி மரங்களை நடுவதற்கு ஏழைப் பெண்களைத் திரட்டினார்.

ஆப்பிரிக்காவில் காடழிப்பும் காடு இழப்பும், அதைச் பாலைவனமாக்கி விட்டதையும், நிலம் பாலைவனமாதல் உலகின் பல பகுதிகளுக்கும் பரவி வருவதையும் இப்போது நாம் பார்க்கிறோம். பாலைவனமாவதில் இருந்து காடுகளைப் பாதுகாப்பது என்பது, உலகச் சுற்றுச்சூழலை வலுப்படுத்துவதில் முக்கிய முன்னெடுப்பு என்பதில் சந்தேகமில்லை. கல்வி, குடும்பக் கட்டுப்பாடு, ஊட்டச்சத்து, ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றின் மூலம் பசுமை பட்டை அமைப்பு அடித்தட்டு மக்களுக்கு உதவும் வளர்ச்சிக்கான சூழ்நிலையை உருவாக்கியது.

1980களில் பெண்களுக்கான தேசியக் கவுன்சிலின் தலைவியாக மாத்தாய் பதவியேற்றார். மரம் நடுவது, பெண்களுக்கான அரசியல் பிரசாரத்தில் அவர் பெற்ற வெற்றிகள், கென்ய ஆட்சியில் இருந்தவர்களுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தின. பின்னர் ஜனநாயக ஆதரவு இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவராக அவர் மாறினார். நைரோபியில் உள்ள ஒரே பூங்காவான உஹுரு பூங்காவை அழித்து 62 அடுக்குகள் கொண்ட கட்டடத்தைக் கட்ட கென்ய அரசு நினைத்தபோது, மாத்தாய் நடத்திய போராட்டத்தால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இப்படி அவருடைய முயற்சிகள் சுற்றுச்சூழல், ஜனநாயகம், பெண் உரிமைக்கான போராட்டங்கள் அனைத்தும் ஒரே தளத்துக்கு வந்தன. பல்வேறு சமூக முன்னெடுப்புகளுக்கு எதிராக மாத்தாய் சித்திரவதைக்கு ஆளாக வேண்டியிருந்தது. அவர் மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்; கண்ணீர் புகைக்குண்டாலும், தடியாலும் தாக்கப்பட்டார். அரசுக்கு இக்கட்டுகளை ஏற்படுத்தும் அந்தப் பெண்ணை அடக்குவதில் அரசாங்கம் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை.

சர்வதேச அளவில் மாத்தாய் பிரபலமடைந்தார், தன்னுடைய பணிகளுக்காகப் பல பரிசுகளைப் பெற்றார். 1978ஆம் ஆண்டிலிருந்து கென்யாவில் சர்வாதிகார ஆட்சி நடத்திவந்த டேனியல் அரப் மோய் 2002ஆம் ஆண்டில் பதவி விலகிய பிறகு நடைபெற்ற தேர்தலில், நாடாளுமன்றத்துக்கு மாத்தாய் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003-ம் ஆண்டில் பல்வேறு கட்சிகளின் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த ஆட்சியில் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள், காட்டுயிருக்கான இணை அமைச்சராக மாத்தாய் நியமிக்கப்பட்டார்.

ஜனநாயகம், மனித உரிமை, டேனியல் அரப் மோய் ஆட்சியின் கீழ் பெண் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர்களில் வங்காரி மாத்தாய் முன்னணியில் இருந்தாலும், அவருடைய சுற்றுச்சூழல் சேவையைக் கணக்கில்கொண்டு, சுற்றுச்சூழல் சேவையும் உலக அமைதிக்குப் பங்களிக்கிறது என்பதை அங்கீகரிக்கும் வகையில் முதன்முறையாக நோபல் அமைதிப் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. 

இதன்மூலம் நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்ற கௌரவத்தையும் அவர் பெற்றார்.


நன்றி: தி இந்து

19 செப்டம்பர் 2013

நரேந்திர மோடி நல்லவரா? கெட்டவரா?

கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணி அரசிடம் பெற்ற  மோசமான அனுபவங்கள் கண்டிப்பாக அடுத்த தேர்தலில் ஆட்சி மாற்றம் செய்தே தீரவேண்டும் என்ற எண்ணத்திற்கு பெரும்பாலான மக்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக சமூக தளங்களில் இக்கருத்து மேலோங்கி இருப்பதை காண முடிகிறது. 


ஆட்சி மாற்றம் வேண்டுமானால் அதற்கு நரேந்திர மோடியை பிரதமராக்குவதுதான் ஒரே வழி என்று ஒரு தரப்பினரும், ஆட்சி மாற்றம் வேண்டும்தான் ஆனால் அதற்காக நரேந்திர மோடியை பிரதமராக்கினால் நாட்டின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று ஒரு தரப்பினரும் கூறி வருகின்றனர். 

நரேந்திர மோடியை ஆதரிப்பவர்கள் கூறும் காரணம், குஜராத்தில் மோடியின் அபார நிர்வாகத் திறமையால் அம்மாநிலம் அபார வளர்ச்சியடைந்துள்ளது அவரை பிரதமராக்கினால் இந்தியா முழுமையும் அதே நிலைமையை எட்டும் என்பது. 

மோடியை எதிர்ப்பவர்கள் கூறும் காரணம் குஜராத்தில் வளர்ச்சி என்று ஊடகங்கள் பொய் பிரச்சாரம் செய்கின்றன என்றும் குஜராத் கலவரம் மன்னிக்கமுடியாதது என்றும் கூறுகின்றனர். மூன்றாவது அணி மூலமாகத்தான் இந்தியாவிற்கு நல்லாட்சி கொடுக்க முடியும் என்பதும் இவர்களின் கருத்து. 

காங்கிரசுக்கு எதிரானவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த கருத்து வேறுபாடு காங்கிரசுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

காரணம் பாஜக வை தவிர வேறு எந்த கட்சியையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்கிற தைரியம் காங்கிரசுக்கு உண்டு. 

கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றதில் கொண்டுவரும் தீர்மானங்களை தொடக்கத்தில் தீவிரமாக எதிர்க்கும்  மாநிலக்கட்சிகள் ஓட்டெடுப்பு என்று வரும்போது காங்கிரசுக்கு ஆதரவாக சென்றுள்ளதைப் பார்த்திருக்கிறோம். 

இதன்மூலம் காங்கிரசைப் போன்றே பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் மாநிலக் கட்சிகள் பலவற்றை காண முடியும். 

எனவே இந்த சுயநல மாநில கட்சிகளுக்கு ஓட்டளிப்பதும் காங்கிரசுக்கு ஓட்டளிப்பதும் ஒன்றுதான். 

நரேந்திர மோடி நல்லவரா? கெட்டவரா? என்று என்னிடம் கேட்டால் அதற்கு நான் கூறும் பதில் "நாயகன் கமல்" கூறும் பதில்தான்.

18 ஜூலை 2013

குவாட்டரை விரும்பி சுவைக்கும் கொசுக்கள்!

நான் சிறு வயதாக இருந்தபோதெல்லாம் கொசு என்றொரு உயிரினத்தை எங்கள் ஊரில் உண்மையிலேயே பார்த்ததில்லை. 

ஆனாலும் நெல்லை போன்ற நகரங்களுக்கு செல்கையில் அங்கு அப்பொழுதே mosquito bat (விளக்குமாறு) சிலர் கொசுக்களை விரட்ட உபயோகிப்பதைப் பார்த்திருக்கிறேன். 


ஆனால் இப்போது பாரபட்சமின்றி அனைத்து இடங்களிலும் கொசுக்கள் தங்கள் கைவரிசையைக் காண்பித்து வருகின்றன. 

பொதுவாக கொசுக்கள் சில குறிப்பிட்ட வகையினரை மட்டும் அதிகமாக தாக்குவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன (எதிர்க்கட்சி சதியெல்லாம் இல்லை) இப்போது கொசுக்களின் தாக்குதலுக்கு அதிகம் ஆட்படும் ஐந்து பிரிவினரை பார்ப்போம்.

1)  மது அருந்துபவர்கள் :

வாய்யா வாய்யா என் டாஸ்மாக் தங்கம். 2011 ல் நடத்தப்பட்ட ஒரு பிரெஞ்சு ஆய்வின்படி மது அருந்துபவர்கள் இரத்தத்தை கொசுக்கள் மிகவும் விரும்பி குடிக்கிறதாம். மது அருந்தாதவர்களை விட மது அருந்துபவர்கள் 30% அதிகம்  கொசுக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறார்களாம். 

2) குண்டாக இருப்பவர்கள்:

கொசுக்களின் அடுத்த இலக்கு கொளுத்த சரீரம் உடையவர்கள் . கொசுக்களுக்கு எப்பொழுதுமே கார்பன் டை ஆக்சைடு மீது ஒரு ஈர்ப்பு உண்டு . கொளுத்த சரீரம் உடையவர்கள் மீதிருந்து வெளியாகும் அதிகப்படியான உஷ்ணம் மற்றும் கார்பன் டை ஆக்சைடு கொசுக்களை அதிகம் ஏற்பதாக Annals of Internal Medicine என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

3) உடற்பயிற்சி செய்பவர்கள்:

"இது என்னடா கொடுமையா இருக்குது" என்று நாம் நினைக்கலாம். நல்ல உடற்பயிற்சி செய்பவர்கள் உடலிலுள்ள வெப்ப ஈர்ப்பு, அவர்கள் உடலில் இருந்து வெளியாகும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு மற்றும் அவர்கள் உடலிலுள்ள  லாக்டிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் உடற்பயிற்சி செய்பவர்களை கொசுக்களுக்கு அடையாளம் காட்டுவதாக Susan Paskewitz என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார்.

4) இரத்த வகைகள்:

பிளட் குரூப்பை நாமெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு கண்டு பிடிக்கிறோம். ஆனால் கொசுக்கள் எப்படித்தான் கண்டுபிடிக்கிறதோ தெரியவில்லை . 83% கொசுக்கள் "O " குரூப் இரத்தம் இருப்பவர்களைக் கண்டால் அங்கிருந்து நகராது  என்று கூறுகிறது ஆராய்ச்சி முடிவு. எப்படித்தான் கண்டு பிடிக்கிறதோ தெரியவில்லை.

5) கர்ப்பிணிப் பெண்கள் : 

அட கொசுக்களே உங்களுக்கு இரக்கமே இல்லையா . கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து வெளியாகும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு மற்றும் அவர்கள் வயிற்றுப்பகுதியிலுள்ள அதிகப்படியான உஷ்ணம் கொசுக்களை அதிகம் ஈர்க்கின்றதாம். சாதாரண பெண்களை விட கர்பிணிப் பெண்கள் இருமடங்கு அதிகம் கொசுக்களின் தாக்குதலுக்கு உள்ளாவதாகக் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

நன்றி: The Week

12 ஜூலை 2013

திறமையான நீதிபதி யார் ?



நம் நாட்டில் பல்வேறு சிறிய மற்றும் பல  பெரிய வழக்குகள் நீதி மன்றத்தில் நடந்து வருகின்றன.... 

அயோத்தி பிரச்சினை காவிரி பிரச்சினை முல்லை பெரியாறு பிரச்சினை இன்னும் என்னென்னவோ பிரச்சினைகள்....

இப்பிரச்சினைகள் சம்மந்தமான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. இந்த அனைத்து பிரச்சினைகளும் என்றாவது ஒரு நாள் தீர்த்து வைக்கப்பட்டுவிடும் . 

ஆனால் இதையெல்லாம் விட சிக்கலான பிரச்சினை ஒன்றுள்ளது. 

அதுதான் மாமியார் மருமகள்  இடையே உருவாகும் பிரச்சினை. 

எப்பேர்பட்ட நீதிபதியாக இருந்தாலும் இந்த பிரச்சினையில் மாட்டினால் சிக்கல்தான். 

ஆகவே கட்டிய மனைவிக்கும் பெற்ற தாய்க்கும் இடையே பிரச்சினை எழும்போது அதை தீர்க்க யாருக்கு திறமை உள்ளதோ அவர்தான் திறமையான நீதிபதி. 

இந்த போட்டிக்கு வர்றவுங்கல்லாம் கொஞ்சம் கைய தூக்குங்கண்ணே ....

22 ஜூன் 2013

Gmail - அனுப்பிய மெயிலை UNDO செய்வது எப்படி ?

சில வேளைகளில் நாம் மின்னஞ்சல் அனுப்பியவுடன் அதை தவறுதலான முகவரிக்கு அனுப்பிவிட்டதாகவோ அல்லது அதை அனுப்பவேண்டிய அவசியம் இல்லை எனவோ  அனுப்பியபின்னர் உணரக்கூடும். 

இது போன்ற சூழ்நிலைகளில் அனுப்பிய மெயிலை ரத்து (UNDO ) செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

முதலில் உங்கள் Gmail அக்கவுண்டை திறந்துகொள்ளுங்கள். பின்னர் படத்தில் காட்டியுள்ளவாறு Settings பகுதிக்கு செல்லுங்கள் .



இப்போது வரும் பக்கத்தில் LABS எனும் Tab ஐ தேர்வு செய்யவும். 


இப்போது படத்தில் கண்டவாறு Undo Send என்பதை Enable செய்யுங்கள்.


இனி மாற்றங்களை சேமித்து வெளியேறுங்கள். 

இப்போது நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியவுடன் அதை Undo செய்யும் வசதி கிடைத்திருப்பதை காணமுடியும்.

14 ஜூன் 2013

கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி !

நன்றி: ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.


எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.

உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

ஆனால், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியைத் தொடர்ந்து பல மணிநேரங்கள் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது.

கண்களுக்கு ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.

மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.

சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும். அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட்பார்கள். எனவே சூரியநமஸ்காரம் செய்வதால் கண் பார்வை அதிகரிக்கும். பொதுவாக சூரியநமஸ்காரத்தை அதிகாலையில் சூரியன் உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரத்தை வெவ்வேறு வேளைகளில் செய்வதால் வெவ்வேறு பலன்கள் கிட்டும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓய்வாக அமையும். பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.

அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அப்படி செய்யும்போது உள்ளங்கைகளை எடுத்துவிட்டு சிறிது நேரம் கழித்து மெதுவாக கண்களைத் திறக்க வேண்டும்.

மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. 

எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.

அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

05 ஜூன் 2013

நம் சந்ததிகளை காக்க நாம் உடனடியாக செய்யவேண்டிய 10!

கடந்த சில வருடங்களாக உலகம் முழுவதுமே ஒரு வேகமான மாற்றத்தை சந்தித்து வருகிறது. பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் வருகின்றன இவைகள் நம் அன்றாட பணிகளை எளிதாக்கி வருகின்றன. 

ஆனால் மிக முக்கியமான ஒன்றில் உலக மக்கள் கவனம் செலுத்த தவறி வருகின்றனர். 


அதுதான் சுற்றுசூழல் பாதுகாப்பு. 

சுற்று சூழலுக்கு விளைவிக்கப்படும் தீங்குகள் நம் எதிர்கால சந்ததிகள் உயிருக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.எனவே உலக சுற்றுசூழல் தினமான இன்று சுற்றுசூழலை பாதுகாக்க நம்மாலியன்ற இந்த சிறு சிறு செயல்களை செய்ய உறுதியேற்போம்.

1) இன்று காற்று மாசுபடுவதற்கும் மழைவளம் குறைவதற்கும் மரங்கள் வெட்டப்படுவதுதான் முக்கிய காரணியாக உள்ளது. எனவே மரங்களை வெட்டுவதை குறைத்துவிட்டு மரங்களை நடுவதில் ஆர்வம் செலுத்த வேண்டும். பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கியும் மரங்களை நட்டும் வருகின்றன. அவர்களுக்கு நம்மாலியன்ற ஒத்துழைப்பை அளிக்கவேண்டும்.

2) புவி வெப்பமயமாதலுக்கும், பல்வேறு நோய்களுக்கும் காரணமாக விளங்கும் மறு உபயோகம் செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை அறவே தவிர்க்கவேண்டும்.

3) கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்தவேண்டும்.

4) கழிவுநீரை முறையாக வடிகால் அமைத்து அகற்றவேண்டும். கண்ட கண்ட இடங்களில் கழிவு நீரை தேங்க விடக்கூடாது.

5) மிகவும் அவசியப்பட்டாலன்றி கார், மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.

6) மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும்.  மிகவும் அவசியப்பட்டாலன்றி AC மற்றும் குளிர்சாதன பெட்டிகள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.

7)  நிலத்தடி நீரை பாதுகாக்க தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும். மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க மழை  நீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்கவேண்டும்.

8) மின்னணு சாதனங்கள் பழுதானால் உடனடியாக அதை தூக்கி எரிவதை விட்டுவிட்டு அதை சரி செய்யவோ அல்லது மறு உபயோகம் செய்யவோ அல்லது தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கவோ செய்யலாம்.

9) மின்சாரத்தை உறிஞ்சி வெப்பத்தை அதிகமாக வெளியிடும் குண்டு பல்புகளை தவிர்த்துவிட்டு CFL அல்லது LED  பல்புகளை பயன்படுத்தவேண்டும்.

10) சுற்றுசூழலுக்கு சற்றும் தீங்கு விளைவிக்காத சூரிய மின்சக்தி அமைப்புகளை ஏற்படுத்தவேண்டும்.

இவைகளையெல்லாம் நாம் செய்யத் தவறுவோமானால் அது நம்  எதிர்கால சந்திதிகளின் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல என்பதை உணர்வோமாக.

26 ஏப்ரல் 2013

புலியின் முடியை பிடுங்கிய பெண்!

ஒரு அபூர்வமான முனிவரிடம் ஒரு பெண் வந்து தன கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள்.

முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.

மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து வந்து விட்டாள். மறுநாள் சென்றாள் புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைவாக இருந்தது. ஆனாலும் திரும்பி விட்டாள்.

அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்து விட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.

புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள்.

முனிவர் கூறினார் ''இனி உனக்கு மூலிகை தேவையில்லை."

நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கி விட்டாய்.

அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா, என்ன?''

முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது.அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள்...!

நீதி: நம் பயங்களும் சந்தேகங்களும் மற்றவரின் அன்பையும் நட்பையும் அடையத் தடையாக இருக்கக்கூடாது.

  நன்றி- "அக்கம் பக்கம் கொஞ்சம்- முகநூல் பக்கம்"

22 ஏப்ரல் 2013

பூமிக்கு என்ன பரிசு கொடுக்கலாம்!

இன்று உலக புவி தினம். 
பெற்ற தாய் பிள்ளைகள் தரும் இன்னல்களை எவ்வாறு தாங்குவாளோ அதுபோல நம் பூமித்தாய் நாம் கொடுக்கும் எல்லா இன்னல்களையும் தாங்கிக்கொண்டு நம்மை உயிர் வாழ வைக்கிறாள். நமக்காக தியாகங்கள் பல செய்யும் நம் பூமித்தாய்க்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம். ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற சில சிறிய நற்காரியங்களை செய்தாலே நம் பூமித்தாயை பசுமைத் தாயாக மாற்ற முடியும். 
இதற்கு நாம் என்னென்ன செய்யலாம் ...
1) புதை படிவ எரிபொருள் உபயோகத்தை கட்டுப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க சக்திகளான காற்றாலை, சூரிய ஓளி திட்டங்களை செயல்படுத்தலாம். இதனால் கரியமில வாயுவினால் ஏற்படும் பாதிப்பு வெகுவாக குறைகிறது. வீட்டளவிலும் இதுபோன்ற திட்டங்களை தேவைக்கேற்ப நிறுவலாம்.மேலும் குறைந்த அளவு மின்சாரமே தேவைப்படும் சிஎப்எல் பல்புகளை பயன்படுத்தலாம்.

2) குப்பைகளை குறைப்பதால் மீதேன் உள்ளிட்ட ஆபத்தான வாயுக்களின் வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 10 சதவீதம் வரை வாயு வெளியேற்றத்தை குறைக்க முடியும். நம் வாழ்வியல் முறையில் மாற்றங்கள் கொண்டு வந்து, கூடிய அளவுக்கு மறுசுழற்சி செய்யலாம். இதனால் தேவைகள் குறைவதோடு அவற்றை தயாரிப்பதற்கான எரிபொருளும், சக்தியும் பாதுகாக்கப்படுகின்றன.

3)ஒவ்வொரு முறை தண்ணீரை சுத்திகரிக்கும் போதும், விநியோகிக்கும் போதும் அதிகளவில் ஆற்றல் வீணடிக்கப்படுகிறது. சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துவதோடு, சேமிக்கும் வழிகளையும் யோசிக்கலாம்..மழை நீரை சேமிப்பதில் அனைவரும் ஆர்வம் காட்டினால் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும்.

4)வீடுகளை வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள, சுவர்களுக்கு பாதுகாப்பு பூச்சு, ஜன்னல்களுக்கு பருவநிலை காக்கும் கண்ணாடி என பல நவீன அம்சங்களை சேர்த்துக்கொள்ளலாம்.இதன் காரணமாக அதிக வெப்பத்தை வெளியேற்றும் குளிர்சாதன கருவிகளை எல்லா நேரங்களிலும் உபயோகிப்பதை தவிர்க்கலாம்.

5) அருகாமையிலுள்ள இடங்களுக்கு நடந்தோ, மிதிவண்டியிலோ செல்லலாம். தேவைப்படும் நேரங்களில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த எண்ணலாம். வாகனத்தை இயக்குவதாக இருந்தாலும், அது நல்ல நிலையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்யவேண்டும். வாகனங்களாலும் அதிகளவில் எரிபொருள் வீணடிக்கப்படலாம்.

6) தேவைப்படும் நேரங்களை தவிர பிற நேரங்களில் மின்சாரம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

7) பல வகை மாசினால் மூச்சு திணறி கொண்டிருக்கும் பூமிக்கு பிராணவாயுவை கூட்டவும், ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து நம்மை பெருமளவு காப்பாற்றவும் தேவைப்படுவது மரங்கள்.நிழல் தரும் மரங்கள் வளர்ந்தால், பூமி சற்றே இளைப்பாறும்.
 

26 ஜனவரி 2013

முட்டையிலிருந்து கோழி வரவில்லை -ஆராய்ச்சி முடிவு !

கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வருகிறது. 


இந்த நீண்ட நாள் கேள்விக்கு தற்போது விடை கண்டு பிடித்துள்ளார் நமது மாநிலத்திற்கு அண்டை மாநிலமான  புதுவையிலுள்ள விஞ்ஞானி ஒருவர். 

இந்த ஆராச்சிக்காக அவர் ஒரு கோழியையும் பத்து முட்டைகளையும் பயன்படுத்தியுள்ளார் . 

பத்து முட்டைகளையும் அந்த ஒரு கோழியை வைத்து அடை காக்க வைத்துள்ளார் . சிறிது நாட்கள் கழித்து முட்டையை பரிசோதித்த விஞ்ஞானி ஆனந்தக் கூத்தாடினார் . காரணம் அவரது ஆராய்ச்சிக்கு முடிவு  கிடைத்துவிட்டது . முட்டையிலிருந்து கோழிகள் எதுவும் வரவில்லை மாறாக கோழி குஞ்சுகள்தான் வந்துள்ளன. 

இதன் மூலம் நீண்ட நாள் பிரச்சினைக்கு முடிவு கட்டிஇருப்பதாக கூறியுள்ளார் அவ்விஞ்ஞானி . இதற்காக தனக்கு இன்னும் 15 நாட்களில் நோபல் பரிசு கிடைக்கும் எனவும்  அடித்துக் கூறுகிறார் வில்லேஜ் விஞ்ஞானி நா.சா .

18 டிசம்பர் 2012

உங்கள் PENDRIVE ல் கோப்புகளை காண முடியவில்லையா ?

சில சமயங்களில் நாம் உபயோகிக்கும் PENDRIVE  மற்றும் மெமரி கார்டுகளில் இது போன்ற பிரச்சினை ஏற்படுவதுண்டு. கோப்புகள் எதுவும் அழிக்கப் பட்டிருக்காது ஆனால் DRIVE  ஐ திறந்தால்  எதுவுமே தெரியாது. அல்லது குறிப்பிட்ட சில கோப்புகள் தெரியாது. HIDDEN FILE ஆகவும் அவை இருக்காது . ஆனால் DRIVE  ஐ மவுசால் வலதுபுறம் கிளிக் செய்து PROPERTIES  கிளிக் செய்தால் இத்தனை GB இதில் உள்ளது என காண்பிக்கும். 



இது போன்ற பிரச்சினைகளிலிருந்து  கோப்புகளை மீட்டெடுக்க பல்வேறு மென்பொருட்கள் உள்ளன . எனினும் அவற்றால்கூட சில சமயங்களில் மீட்டெடுக்க முடியாமல் போகலாம். இப்பிரச்சினையை சரி செய்ய ஒரு எளிய வழி உள்ளது . 


முதலில் பிரசினைக்குள்ளான  DRIVE  ஐ மவுசால் RIGHT கிளிக் செய்து படத்தில் காண்பிக்கப் பட்டுள்ளவாறு Add to archive என்பதை தேர்ந்துடுக்கவும் .

இப்போது கீழ் கண்டவாறு ஒரு window  தோன்றும் . அதில் Browse என்பதை கிளிக் செய்தால் மீட்கப் படும் கோப்புகளை சேமிக்கும் இடத்தை தேர்வு செய்யலாம். இனி OK  பட்டனை அழுத்தவேண்டியதுதான் . 


இப்போது காணாமல் போன கோப்புகள் அனைத்தும் ஒரு ZIP  FILE  ஆக கணினியில் சேமிக்கப்படும் . அதிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்கலாம்.

07 டிசம்பர் 2012

BSNL நீங்கள் விரும்பும் மொபைல் எண்ணை பெற ...

அனேக சமயங்களில் நாம் புதிதாக சிம்கார்டு வாங்கும்போது நாம் நினைப்பதுபோல் எண்கள் கிடைப்பதில்லை .மேலும் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம்கார்டுகளைப் பயன்படுத்துவதுண்டு. புதிய சிம்கார்டின் எண்ணானது  ஏற்கெனவே இருக்கும் சிம்கார்டின் எண்ணை சற்று ஒத்திருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கலாம் . 


இதற்கு வசதியாக நமது மொபைல் நம்பரை நாமே ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யும் வசதியை BSNL வழங்குகிறது. இந்த லிங்க்கில் சென்று உங்கள் மாநிலத்தை தேர்வு செய்யுங்கள் . உங்கள் மாநிலதிற்குரிய தளம் திறந்ததும் படத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தில டிராக் செய்து தளத்தை அன்லாக் செய்துகொள்ளுங்கள் . 


இப்போது உங்களுக்கு சில மொபைல் எண்கள்  காட்டப்படலாம் .அவற்றில் ஏதாவது பிடித்திருப்பின் அதை டிக் செய்து RESERVE NUMBER என்பதை கிளிக் செய்யுங்கள் .அடுத்து வரும் கட்டளைகளை பின்பற்றுவதன் மூலம் உங்களுக்கு ஒரு பின் நம்பர் கிடைக்கும் .

அந்த எண்ணை பத்திரமாக குறித்து வைத்துக்கொண்டு 48 மணி நேரத்திற்குள்ளாக உங்களுக்கு அருகாமையில் உள்ள BSNL  அலுவலகத்திற்கு சென்று சிம் கார்டை பெற்றுக்கொள்ளலாம். 

நீங்கள் விரும்பும் எண்ணை தேர்வு செய்ய தளத்தில் இருக்கும் SEARCH வழிமுறையை பின்பற்றலாம் . 

FANCY எண்கள் தேவைப்பட்டால் அதற்குரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

27 செப்டம்பர் 2012

பிறந்த நாள் வாழ்த்துகள் கூகுள்!



கடவுளுக்கு அடுத்தபடியாக காசில்லாமல் உதவி செய்வது கூகுள் ஆண்டவர் என பெருமையுடன் அழைக்கப்படும்  கூகுள் . இன்று தனது 14 -வது பிறந்த நாள் கொண்டாடும் கூகுளுக்கு எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

26 செப்டம்பர் 2012

IRCTC ல் விரைவாக தட்கல் டிக்கட் முன்பதிவு செய்ய

இணையத்தில் செய்யக்கூடிய மிகக் கடினமான வேலைகளில் ஒன்று   IRCTC ல் தட்கல் முறையில் பயணச் சீட்டு முன் பதிவு செய்வது . தட்கல் முன்பதிவு 10  மணிக்கு ஆரம்பமாகும். ஆனால் எவ்வளவு வேகமான இணைய இணைப்பை கொண்டிருந்தாலும் IRCTC  தளத்திற்குள் நுழைவது சவாலாகவே இருக்கும். தளத்திற்குள் நுழைந்தாலும் பயண சீட்டிற்கு தேவையான வேலைகளை செய்து முடிக்கும் முன்பாக பயண சீட்டுகள் காலியாகிவிடும். 

பின் வரும் முறைகளை பின்பற்றுவதன் மூலமாக 5  நிமிடத்திற்குள்ளாக தட்கல் முன்பதிவு செய்ய முடிகிறது. 


1) முன்பதிவு துவங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக அதாவது 9 .45  க்கு LOGIN செய்து IRCTC  தளத்திற்குள் நுழையவேண்டும். 

2) தளத்திற்குள் நுழைந்தபின் ஓய்வெடுத்துவிடாமல் தளத்தினுள் ஏதாவது தகவல்களை கிளிக் செய்து பார்த்துக் கொண்டிருக்கவேண்டும் . இல்லையெனில் தானாக LOGOUT  ஆகிவிடும்.   

3) முன்பதிவு தொடங்குவதற்கு சரியாக 2  நிமிடங்களுக்கு முன்பாக அதாவது  9 .58  க்கு புறப்படும் இடம் சேருமிடங்களை நிரப்பவும் . சம்மந்தப் பட்ட ரயில் நிலையங்களின் பெயரை உள்ளிடுவது கால தாமதத்திற்கு வழிவகுக்கும் . பதிலாக முன்னதாகவே நிலையங்களுக்கான குறியீடுகளை அறிந்து வைத்துக்கொண்டு அதை மட்டும் உள்ளீடு செய்யவேண்டும். (உ.தா.) NAGERCOIL JUNCTION- NCJ , CHENNAI EGMORE- MS 

4) இப்போது பயண சீட்டு இருப்பு விபரங்கள் தெரிய வரும் BOOK  கொடுப்பதற்கு முன்பாக 10  மணி ஆகிவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் . 

5) பணப் பரிமாற்றத்திற்கு NET  BANKING  ஐ விட CREDIT CARD , DEBIT CARD உபயோகிப்பது நேரத்தை மிச்சப் படுத்தும். 

குறிப்பு: எக்காரணம் கொண்டும் SERVICE  UNAVAILABLE  ERROR  வந்தால் தவிர REFRESH  செய்யக்கூடாது. அப்படி செய்தால் அது தளத்திலிருந்து உங்களை வெளியேற்றிவிடும். மீண்டும் தளத்திற்குள் நுழைவது குதிரைக் கொம்பாகிவிடும். 

நான் இந்த முறையைத்தான்  பயன்படுத்துகிறேன் . இதை விட  சிறந்த வழிகள்  ஏதாவது இருப்பின் கருத்துரையில்  தெரிவியுங்கள் .

24 செப்டம்பர் 2012

வாருங்கள் நண்பர்களே பசுமை உலகம் படைப்போம்.

 பல வருடங்களாகவே காடுகளை அழிப்பதால் மழை குறைந்துவிட்டது என்றும் , வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்றும் வாயாரப் பேசி வருகின்றோம். ஆனால் பிரச்சினைக்கு தீர்வு காண பெரும்பாலானோர் முயற்சி செய்யாமலேயே இருக்கிறோம். நாம் ஒருவர் மட்டும் நினைத்தால் நாட்டை சோலைவனம் ஆக்கிவிட முடியுமா என்று எண்ணியே பலரும் சோர்ந்து போய் உட்கார்ந்துவிடுகிறோம். 


ஆனாலும்  ஆங்காங்கே சில பெரிய உள்ளங்கள் பசுமை உலகம் படைத்தது வருகின்றனர். அரசுப் பேருந்து நடத்துனராக இருக்கின்ற திரு யோகநாதன் அவர்கள் தனி மனிதராக 1  லட்சம் மரங்கள் நட்டு சாதனை படைத்திருக்கிறார். அவர் பற்றிய தகவல்களை ஏற்கெனவே ஒரு பதிவில் பகிர்ந்திருந்தேன். 

அழிந்து போன காடுகளை மீட்டிடும் நோக்கிலும் மறைந்து போன மழையை வரவழைக்கும் நோக்கத்திலும் பசுமை விடியல் என்ற ஒரு அமைப்பு உருவாக்கப் பட்டு அமைப்பின் மூலம் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் நடப் பட்டு வருகின்றன. திருமண விழாக்கள் போன்ற விழாக்களிலும் மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்த்தலை ஊக்கப் படுத்தி வருகிறது இவ்வமைப்பு . 

இது போன்ற காரியங்களில் அக்கறையுள்ள ஒவ்வொருவரையும் பசுமை விடியல் அழைக்கிறது. நீங்கள் செய்யவேண்டியது மிகச் சிறிய விஷயம்தான் . சூழலுக்கு நன்மை விளைவிக்கும் ஏதேனும் ஒரு மரக் கன்றை வாங்கி அதை உங்கள் வீட்டிலோ அல்லது உங்களுக்கு மரம் வளர்க்க ஏதுவான பகுதியிலோ நட்டு அதை மரம் நடுபவரோடு சேர்த்து புகைப் படம் எடுத்து பசுமை விடியலுக்கு அனுப்புங்கள். 

இது உங்களுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை பயப்பது மட்டுமன்றி பசுமைக்கு வித்திடும் பசுமை விடியல் அமைப்பாளர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையும். 

உங்கள் புகைப் படங்களை விளக்கத்தோடு ( மரம் நடுபவரின் பெயர் மற்றும் முகவரி ) tree@pasumaividiyal.org என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். 

உங்கள் படம் பசுமை விடியல் தளத்தில் பிரசுரிக்கப் படும்.  

பசுமை விடியலின் தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள். 

பசுமை விடியலின் முகநூல் பக்கத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள். 

இப்பதிவிற்கு நீங்கள் ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை கமென்ட் போடாவிட்டாலும் பரவாயில்லை மரம் நட என்னால் இயலாது என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். 

வாருங்கள் நண்பர்களே பசுமை உலகம் படைப்போம்.

17 செப்டம்பர் 2012

கூடங்குளத்தின் தற்போதைய நிலை - நேரடி தகவல்

ஒரு வருடத்திற்கும் மேலாக அமைதியான முறையில் நடைபெற்ற கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் தமிழக அரசின் அடக்குமுறை காரணமாக கடந்த 10-9-2012 அன்று போர்க்களமாக மாறியது. கடற்கரையில் குழுமியிருந்து அணு உலைக்கு எதிராக முற்றுகைப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடியும் கண்ணீர் புகை குண்டும் வீசி பொதுமக்களை கலைந்தோட செய்தனர். 


தொடர்ந்து இடிந்தகரை ஊருக்குள்ளும் போலீஸ் படை  புகுந்தது. அதே வேளையில் கூடங்குளம் பத்திரகாளி அம்மன் கோவில் அருகில் கூடங்குளத்தை சார்ந்த பொதுமக்கள் ஆயிரக் கணக்கானோர் ஒன்று கூடி மறியலில் ஈடுபட்டனர் . உடனே இடிந்தகரைக்குள் சென்ற போலீசார் அனைவரும் கூடங்குளத்திற்கு திரும்பினர். 

போலீசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே நடந்த சண்டையில் பொதுமக்கள் பலர் லத்தியாலும் , குண்டடிபட்டும் ரத்தக் காயமடைந்தனர். கண்ணீர் புகை குண்டுடன் ஆகாயத்தில்  சென்று வெடிக்கும் ஒரு வினோதமான குண்டும் போலீசாரால் உபயோகிக்கப் பட்டது. இந்த குண்டு பட்டதில் கூடங்குளம் கஸ்தூரி மருத்துவ மனை முகப்பு போர்டு சேதமடைந்தது. அடுத்ததாக 

11-9-2012 அன்றைய  தினத்தில்தான் கூடங்குளம் மக்கள் இது வரை காணாத ஒரு மோசமான தாக்குதலை எதிர்கொண்டனர். தனித்தனி குழுக்களாக வெவ்வேறு தெருக்களுக்கும் புகுந்த போலீஸ் படையினர் வழியில்  கண்டவர்கள் அனைவரையும் லத்தியால் தாக்கினர். சில குழந்தைகள், வயதுப்  பெண்களும் இத்தாக்குதலிலிருந்து தப்பவில்லை. 

நடுத்தர வயதுடைய ஆண்கள் பலர் கைது செய்யப் பட்டு திருச்சி மற்றும் வேலூர் உள்ளிட்ட நீண்ட தூரத்திலுள்ள சிறைகளில் அடைக்கப் பட்டனர். இதன் காரணமாக நடுத்தர வயதுடைய ஆண்கள் பலரும் ஊரை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களை நாடி சென்றுவிட்டனர். 

தொடர்ந்து 10  - வது நாளாக கூடங்குளத்தில் கடைகள் அனைத்தும் மூடப் பட்டுள்ளன. அரசுப் பேருந்துகள் இயக்கப் படவில்லை. தனியார் வாகன உரிமையாளர்களும் பயத்தின் காரணமாக வாகனங்களை இயக்கவில்லை. ஒருசில வயதான ஆண்களும், பெண்களும் மட்டுமே தெருக்களில் நடமாடுகின்றனர். 

144  தடை உத்தரவின் கீழ் பல மாதங்களாக சிக்கித் தவிக்கும் கூடங்குளம் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்ட இடம் போல் காட்சியளிக்கிறது.