கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடவேண்டும் என்று கோரி நெல்லை ,
குமரி,தூத்துக்குடி மாவட்ட மக்கள் மிகத்தீவிரமாக போராடி வருகிறார்கள் .
ஆனால் அரசோ மக்களின் அச்சத்தை போக்குவோம் என்று கூறுகிறது .
ஆனாலும் எவ்வாறு அச்சத்தை போக்குவது என்று அரசு முடிவெடுக்கத் திணறி வருகிறது .
ஏதோ என்னால் இயன்ற வரையில் அச்சத்தை போக்குவதற்குரிய சில வழிகளை சொல்கிறேன் .
அச்சம் 1 :அணு உலை செயல்பட ஆரம்பித்தால் அருகில் வசிக்கும் மக்களுக்கு புற்று நோய் வரும் .
அச்சத்தை போக்க : அணுமின் நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டருக்கு அப்பால் கட்டப்பட்டிருக்கும் ஊழியர் குடியிருப்பை 3 கிலோமீட்டருக்குள் கொண்டுவரவேண்டும் .பயத்தை போக்க விரும்பும் அதிகாரிகள் நிரந்தரமாக கூடங்குளம் பகுதியிலேயே குடியேறவேண்டும் .
அச்சம் 2 :மீன்களுக்கு கதிரியக்க பாதிப்பு ஏற்படும் என்பதால் அதை வாங்க யாரும் முன்வர மாட்டார்கள் .
அச்சத்தை போக்க : அணுமின் நிலையத்தில் பணிபுரிவோர் அனைவரும் இப்பகுதியிலிருந்து பிடிக்கப்படும் மீன்களையே வாங்கி உண்ணவேண்டும் .வியாபாரிகள் மீன்களை வாங்க மறுத்தால் அரசே மீன்களை கொள்முதல் செய்துவிட்டு அதற்குரிய விலையை மீனவர்களுக்கு வழங்கவேண்டும் .
அச்சம் 3 : அணு உலை வெடித்தால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும்
அச்சத்தை போக்க : அணுமின் நிலையத்திலிருந்து 50 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் வசிக்கும் சுமார் 18 லட்சம் மக்களை 24 மணி நேரத்தில் பாதுகாப்பாக வெளியேற்றியும் உடனடியாக இவர்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் .இதை மூன்று முறை ஒத்திகையாக நிகழ்த்தி காண்பிக்கவேண்டும் .
இதுபோல இன்னும் சில அச்சங்களும் அதற்கு தீர்வுகளும் உள்ளன .
ஆனால் இந்த எல்லா அச்சங்களையும் எளிதாக போக்க ஒரு சிறந்த வழி உள்ளது .அது அணு உலையை உடனடியாக மூடிவிடுவதுதான் .