18 டிசம்பர் 2012

உங்கள் PENDRIVE ல் கோப்புகளை காண முடியவில்லையா ?

சில சமயங்களில் நாம் உபயோகிக்கும் PENDRIVE  மற்றும் மெமரி கார்டுகளில் இது போன்ற பிரச்சினை ஏற்படுவதுண்டு. கோப்புகள் எதுவும் அழிக்கப் பட்டிருக்காது ஆனால் DRIVE  ஐ திறந்தால்  எதுவுமே தெரியாது. அல்லது குறிப்பிட்ட சில கோப்புகள் தெரியாது. HIDDEN FILE ஆகவும் அவை இருக்காது . ஆனால் DRIVE  ஐ மவுசால் வலதுபுறம் கிளிக் செய்து PROPERTIES  கிளிக் செய்தால் இத்தனை GB இதில் உள்ளது என காண்பிக்கும். 



இது போன்ற பிரச்சினைகளிலிருந்து  கோப்புகளை மீட்டெடுக்க பல்வேறு மென்பொருட்கள் உள்ளன . எனினும் அவற்றால்கூட சில சமயங்களில் மீட்டெடுக்க முடியாமல் போகலாம். இப்பிரச்சினையை சரி செய்ய ஒரு எளிய வழி உள்ளது . 


முதலில் பிரசினைக்குள்ளான  DRIVE  ஐ மவுசால் RIGHT கிளிக் செய்து படத்தில் காண்பிக்கப் பட்டுள்ளவாறு Add to archive என்பதை தேர்ந்துடுக்கவும் .

இப்போது கீழ் கண்டவாறு ஒரு window  தோன்றும் . அதில் Browse என்பதை கிளிக் செய்தால் மீட்கப் படும் கோப்புகளை சேமிக்கும் இடத்தை தேர்வு செய்யலாம். இனி OK  பட்டனை அழுத்தவேண்டியதுதான் . 


இப்போது காணாமல் போன கோப்புகள் அனைத்தும் ஒரு ZIP  FILE  ஆக கணினியில் சேமிக்கப்படும் . அதிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்கலாம்.

07 டிசம்பர் 2012

BSNL நீங்கள் விரும்பும் மொபைல் எண்ணை பெற ...

அனேக சமயங்களில் நாம் புதிதாக சிம்கார்டு வாங்கும்போது நாம் நினைப்பதுபோல் எண்கள் கிடைப்பதில்லை .மேலும் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம்கார்டுகளைப் பயன்படுத்துவதுண்டு. புதிய சிம்கார்டின் எண்ணானது  ஏற்கெனவே இருக்கும் சிம்கார்டின் எண்ணை சற்று ஒத்திருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கலாம் . 


இதற்கு வசதியாக நமது மொபைல் நம்பரை நாமே ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யும் வசதியை BSNL வழங்குகிறது. இந்த லிங்க்கில் சென்று உங்கள் மாநிலத்தை தேர்வு செய்யுங்கள் . உங்கள் மாநிலதிற்குரிய தளம் திறந்ததும் படத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தில டிராக் செய்து தளத்தை அன்லாக் செய்துகொள்ளுங்கள் . 


இப்போது உங்களுக்கு சில மொபைல் எண்கள்  காட்டப்படலாம் .அவற்றில் ஏதாவது பிடித்திருப்பின் அதை டிக் செய்து RESERVE NUMBER என்பதை கிளிக் செய்யுங்கள் .அடுத்து வரும் கட்டளைகளை பின்பற்றுவதன் மூலம் உங்களுக்கு ஒரு பின் நம்பர் கிடைக்கும் .

அந்த எண்ணை பத்திரமாக குறித்து வைத்துக்கொண்டு 48 மணி நேரத்திற்குள்ளாக உங்களுக்கு அருகாமையில் உள்ள BSNL  அலுவலகத்திற்கு சென்று சிம் கார்டை பெற்றுக்கொள்ளலாம். 

நீங்கள் விரும்பும் எண்ணை தேர்வு செய்ய தளத்தில் இருக்கும் SEARCH வழிமுறையை பின்பற்றலாம் . 

FANCY எண்கள் தேவைப்பட்டால் அதற்குரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

27 செப்டம்பர் 2012

பிறந்த நாள் வாழ்த்துகள் கூகுள்!



கடவுளுக்கு அடுத்தபடியாக காசில்லாமல் உதவி செய்வது கூகுள் ஆண்டவர் என பெருமையுடன் அழைக்கப்படும்  கூகுள் . இன்று தனது 14 -வது பிறந்த நாள் கொண்டாடும் கூகுளுக்கு எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

26 செப்டம்பர் 2012

IRCTC ல் விரைவாக தட்கல் டிக்கட் முன்பதிவு செய்ய

இணையத்தில் செய்யக்கூடிய மிகக் கடினமான வேலைகளில் ஒன்று   IRCTC ல் தட்கல் முறையில் பயணச் சீட்டு முன் பதிவு செய்வது . தட்கல் முன்பதிவு 10  மணிக்கு ஆரம்பமாகும். ஆனால் எவ்வளவு வேகமான இணைய இணைப்பை கொண்டிருந்தாலும் IRCTC  தளத்திற்குள் நுழைவது சவாலாகவே இருக்கும். தளத்திற்குள் நுழைந்தாலும் பயண சீட்டிற்கு தேவையான வேலைகளை செய்து முடிக்கும் முன்பாக பயண சீட்டுகள் காலியாகிவிடும். 

பின் வரும் முறைகளை பின்பற்றுவதன் மூலமாக 5  நிமிடத்திற்குள்ளாக தட்கல் முன்பதிவு செய்ய முடிகிறது. 


1) முன்பதிவு துவங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக அதாவது 9 .45  க்கு LOGIN செய்து IRCTC  தளத்திற்குள் நுழையவேண்டும். 

2) தளத்திற்குள் நுழைந்தபின் ஓய்வெடுத்துவிடாமல் தளத்தினுள் ஏதாவது தகவல்களை கிளிக் செய்து பார்த்துக் கொண்டிருக்கவேண்டும் . இல்லையெனில் தானாக LOGOUT  ஆகிவிடும்.   

3) முன்பதிவு தொடங்குவதற்கு சரியாக 2  நிமிடங்களுக்கு முன்பாக அதாவது  9 .58  க்கு புறப்படும் இடம் சேருமிடங்களை நிரப்பவும் . சம்மந்தப் பட்ட ரயில் நிலையங்களின் பெயரை உள்ளிடுவது கால தாமதத்திற்கு வழிவகுக்கும் . பதிலாக முன்னதாகவே நிலையங்களுக்கான குறியீடுகளை அறிந்து வைத்துக்கொண்டு அதை மட்டும் உள்ளீடு செய்யவேண்டும். (உ.தா.) NAGERCOIL JUNCTION- NCJ , CHENNAI EGMORE- MS 

4) இப்போது பயண சீட்டு இருப்பு விபரங்கள் தெரிய வரும் BOOK  கொடுப்பதற்கு முன்பாக 10  மணி ஆகிவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் . 

5) பணப் பரிமாற்றத்திற்கு NET  BANKING  ஐ விட CREDIT CARD , DEBIT CARD உபயோகிப்பது நேரத்தை மிச்சப் படுத்தும். 

குறிப்பு: எக்காரணம் கொண்டும் SERVICE  UNAVAILABLE  ERROR  வந்தால் தவிர REFRESH  செய்யக்கூடாது. அப்படி செய்தால் அது தளத்திலிருந்து உங்களை வெளியேற்றிவிடும். மீண்டும் தளத்திற்குள் நுழைவது குதிரைக் கொம்பாகிவிடும். 

நான் இந்த முறையைத்தான்  பயன்படுத்துகிறேன் . இதை விட  சிறந்த வழிகள்  ஏதாவது இருப்பின் கருத்துரையில்  தெரிவியுங்கள் .

24 செப்டம்பர் 2012

வாருங்கள் நண்பர்களே பசுமை உலகம் படைப்போம்.

 பல வருடங்களாகவே காடுகளை அழிப்பதால் மழை குறைந்துவிட்டது என்றும் , வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்றும் வாயாரப் பேசி வருகின்றோம். ஆனால் பிரச்சினைக்கு தீர்வு காண பெரும்பாலானோர் முயற்சி செய்யாமலேயே இருக்கிறோம். நாம் ஒருவர் மட்டும் நினைத்தால் நாட்டை சோலைவனம் ஆக்கிவிட முடியுமா என்று எண்ணியே பலரும் சோர்ந்து போய் உட்கார்ந்துவிடுகிறோம். 


ஆனாலும்  ஆங்காங்கே சில பெரிய உள்ளங்கள் பசுமை உலகம் படைத்தது வருகின்றனர். அரசுப் பேருந்து நடத்துனராக இருக்கின்ற திரு யோகநாதன் அவர்கள் தனி மனிதராக 1  லட்சம் மரங்கள் நட்டு சாதனை படைத்திருக்கிறார். அவர் பற்றிய தகவல்களை ஏற்கெனவே ஒரு பதிவில் பகிர்ந்திருந்தேன். 

அழிந்து போன காடுகளை மீட்டிடும் நோக்கிலும் மறைந்து போன மழையை வரவழைக்கும் நோக்கத்திலும் பசுமை விடியல் என்ற ஒரு அமைப்பு உருவாக்கப் பட்டு அமைப்பின் மூலம் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் நடப் பட்டு வருகின்றன. திருமண விழாக்கள் போன்ற விழாக்களிலும் மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்த்தலை ஊக்கப் படுத்தி வருகிறது இவ்வமைப்பு . 

இது போன்ற காரியங்களில் அக்கறையுள்ள ஒவ்வொருவரையும் பசுமை விடியல் அழைக்கிறது. நீங்கள் செய்யவேண்டியது மிகச் சிறிய விஷயம்தான் . சூழலுக்கு நன்மை விளைவிக்கும் ஏதேனும் ஒரு மரக் கன்றை வாங்கி அதை உங்கள் வீட்டிலோ அல்லது உங்களுக்கு மரம் வளர்க்க ஏதுவான பகுதியிலோ நட்டு அதை மரம் நடுபவரோடு சேர்த்து புகைப் படம் எடுத்து பசுமை விடியலுக்கு அனுப்புங்கள். 

இது உங்களுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை பயப்பது மட்டுமன்றி பசுமைக்கு வித்திடும் பசுமை விடியல் அமைப்பாளர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையும். 

உங்கள் புகைப் படங்களை விளக்கத்தோடு ( மரம் நடுபவரின் பெயர் மற்றும் முகவரி ) tree@pasumaividiyal.org என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். 

உங்கள் படம் பசுமை விடியல் தளத்தில் பிரசுரிக்கப் படும்.  

பசுமை விடியலின் தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள். 

பசுமை விடியலின் முகநூல் பக்கத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள். 

இப்பதிவிற்கு நீங்கள் ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை கமென்ட் போடாவிட்டாலும் பரவாயில்லை மரம் நட என்னால் இயலாது என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். 

வாருங்கள் நண்பர்களே பசுமை உலகம் படைப்போம்.

17 செப்டம்பர் 2012

கூடங்குளத்தின் தற்போதைய நிலை - நேரடி தகவல்

ஒரு வருடத்திற்கும் மேலாக அமைதியான முறையில் நடைபெற்ற கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் தமிழக அரசின் அடக்குமுறை காரணமாக கடந்த 10-9-2012 அன்று போர்க்களமாக மாறியது. கடற்கரையில் குழுமியிருந்து அணு உலைக்கு எதிராக முற்றுகைப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடியும் கண்ணீர் புகை குண்டும் வீசி பொதுமக்களை கலைந்தோட செய்தனர். 


தொடர்ந்து இடிந்தகரை ஊருக்குள்ளும் போலீஸ் படை  புகுந்தது. அதே வேளையில் கூடங்குளம் பத்திரகாளி அம்மன் கோவில் அருகில் கூடங்குளத்தை சார்ந்த பொதுமக்கள் ஆயிரக் கணக்கானோர் ஒன்று கூடி மறியலில் ஈடுபட்டனர் . உடனே இடிந்தகரைக்குள் சென்ற போலீசார் அனைவரும் கூடங்குளத்திற்கு திரும்பினர். 

போலீசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே நடந்த சண்டையில் பொதுமக்கள் பலர் லத்தியாலும் , குண்டடிபட்டும் ரத்தக் காயமடைந்தனர். கண்ணீர் புகை குண்டுடன் ஆகாயத்தில்  சென்று வெடிக்கும் ஒரு வினோதமான குண்டும் போலீசாரால் உபயோகிக்கப் பட்டது. இந்த குண்டு பட்டதில் கூடங்குளம் கஸ்தூரி மருத்துவ மனை முகப்பு போர்டு சேதமடைந்தது. அடுத்ததாக 

11-9-2012 அன்றைய  தினத்தில்தான் கூடங்குளம் மக்கள் இது வரை காணாத ஒரு மோசமான தாக்குதலை எதிர்கொண்டனர். தனித்தனி குழுக்களாக வெவ்வேறு தெருக்களுக்கும் புகுந்த போலீஸ் படையினர் வழியில்  கண்டவர்கள் அனைவரையும் லத்தியால் தாக்கினர். சில குழந்தைகள், வயதுப்  பெண்களும் இத்தாக்குதலிலிருந்து தப்பவில்லை. 

நடுத்தர வயதுடைய ஆண்கள் பலர் கைது செய்யப் பட்டு திருச்சி மற்றும் வேலூர் உள்ளிட்ட நீண்ட தூரத்திலுள்ள சிறைகளில் அடைக்கப் பட்டனர். இதன் காரணமாக நடுத்தர வயதுடைய ஆண்கள் பலரும் ஊரை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களை நாடி சென்றுவிட்டனர். 

தொடர்ந்து 10  - வது நாளாக கூடங்குளத்தில் கடைகள் அனைத்தும் மூடப் பட்டுள்ளன. அரசுப் பேருந்துகள் இயக்கப் படவில்லை. தனியார் வாகன உரிமையாளர்களும் பயத்தின் காரணமாக வாகனங்களை இயக்கவில்லை. ஒருசில வயதான ஆண்களும், பெண்களும் மட்டுமே தெருக்களில் நடமாடுகின்றனர். 

144  தடை உத்தரவின் கீழ் பல மாதங்களாக சிக்கித் தவிக்கும் கூடங்குளம் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்ட இடம் போல் காட்சியளிக்கிறது.

09 செப்டம்பர் 2012

கூடங்குளம் அணு உலை அதிரடி முற்றுகை!

கூடங்குளம் அணு உலையை இன்று (09 -09 -2012 )முற்றுகையிடப் போவதாக கூடங்குளம் போராட்டக் குழு அறிவித்திருந்தது. 

எப்படியேனும் இதை தடுக்கவேண்டும் என்ற நோக்கில் சுமார் 5000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  

போராட்டக் குழுவினர் கூடியிருந்த இடிந்தகரையிலிருந்து கூடங்குளத்திற்கு வரும் அதனை சாலைகளையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். கூடங்குளம் மார்க்கத்தில் செல்லும் அத்தனை அரசுப் பேருந்துகளும் நிறுத்தப் பட்டன. 


ஆனால் காவல் துறையினர் சற்றும் எதிர் பாரத வகையில் போராட்டக் காரர்கள் சுமார் 10000  பேர்   கடற்கரை வழியாக சென்று பகல் 12  மணியளவில் அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டனர். 

இதை சற்றும் எதிர்பார்க்காத காவல் துறையினரும் , கலெக்டர் உள்ளிட்டோரும் கால் நடையாக சென்று போராட்டக் குழுவினர் முற்றுகையிட்டுள்ள பகுதிக்கு சென்றனர் ( முற்றுகை பகுதிக்குள் எந்த வாகனமும் நுழைய முடியாது).  


போராட்டக் குழுவினருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. முற்றுகை நீடிக்கிறது.

07 செப்டம்பர் 2012

அணு உலையை முற்றுகையிட அழைப்பு.

கூடங்குளம் அணு மின் திட்டத்தைக் கைவிடக் கோரி கடந்த 1  ஆண்டாக இடைவிடாது அறவழிப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன . ஆனால் மத்திய, மாநில அரசுகள் போராட்டத்திற்கு சற்றும் மதிப்பளிக்காமல் அணு உலையை இயக்க தீவிரமாக முயன்று வருகின்றன. 

கூடங்குளத்திலிருந்து  7  கிலோமீட்டர் சுற்றளவுப் பகுதி தொடர்ந்து 6  மாதமாக 144  தடை உத்தரவின் கீழ் உள்ளது. இந்தியாவில் வேறெங்கிலும் இது போன்றதொரு மனித உரிமை மீறல் நடந்திருக்குமா என்பது தெரியவில்லை. 

இதன் காரணமாக போராட்டத்தை அதி தீவிரப் படுத்தும் விதமாக கூடங்குளம் அணு உலையை முற்றுகையிட ஒன்று சேருமாறு பல்வேறு இயக்கங்களுக்கும் ,மனித உரிமை ஆர்வலர்களுக்கும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. 


நேற்று மாலை பல்வேறு ஊர்களிலிருந்தும் பொதுமக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக இடிந்தகரை வரத் தொடங்கினர் .அவர்களை போலீசார் இடிந்தகரை செல்ல விடாமல் தடுத்தனர். உடனடியாக இடிந்தகரையிலிருந்து சுமார் 5000  பேர் போலீசார் தடுத்த இடத்திற்கு வந்தனர். உடனே போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். போலீசார் சாலையில் வைத்திருந்த தடுப்புகளை பொதுமகள் அகற்றினர் .

03 செப்டம்பர் 2012

பள்ளி குழந்தைகளுக்கு அரசுப் பேருந்துகளால் ஆபத்து!

      சமீப காலமாக பள்ளிக் குழந்தைகள் இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழாமல் தடுக்கவேண்டுமானால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். 
      
     
    இரண்டு நாட்களுக்கு முன்பாக தொழில் நிமித்தம் நான் நாகர்கோவில் சென்றுவிட்டு வரும் வழியில் கன்னியாகுமரி அருகிலுள்ள அஞ்சுகிராமம் என்ற ஊரில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்து நின்றேன். அப்போது மாலை சுமார் 5 மணியளவில்  ஒரு நகரப் பேருந்து, பேருந்து நிலையத்தினுள் நுழைந்தது. பேருந்து உள்ளே நுழையவும் சுமார் 30  மாணவர்கள் வேகமாக ஓடிச் சென்று கும்பலாக பேருந்தினுள் ஏற முற்பட்டனர். இத்தனைக்கும் அப்போது பேருந்து முழுமையாக நிறுத்தப் படவில்லை. பேருந்தில் ஏற முற்பட்ட மாணவர்களும் 5  ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயில்பவர்கள் போல் தோற்றமளித்தனர். அவர்கள் முட்டி மோதிக்கொண்டு பேருந்தினுள் ஏற முற்பட்டபோது ஒரு கணம் எனது நெஞ்சு பட படவென அடித்துக்கொண்டது. நெரிசலில் ஏதாவது ஒரு மாணவன் தவறி வண்டி சக்கரத்தில் சிக்கினால் என்னவாகும். 

     எனவே பள்ளிப் பேருந்துகளில் செல்லும் மாணவர்கள் மீது கவனம் செலுத்துவது போல் இதர வாகனங்கள் மூலமாக பயணம் செய்யும்  மாணவர்களும் பாதுகாப்பாக பயணிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். 

வந்தபின் வருந்துவதை விட வருமுன் காப்பது சிறந்ததல்லவா.

04 ஆகஸ்ட் 2012

21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் !

சிரவணனின் கதையை நாம் பலரும் அறிந்திருப்போம்.தாய், தந்தை பாசத்திற்கு இலக்கணமாக வாழ்ந்தவன் சிரவணன்.வயதான பார்வையற்ற தனது தாய் தந்தையரை தொட்டிலில் வைத்து தோளில் சுமந்தான் சிரவணன்.

ஆனால் இப்போது அதற்கு நேர் மாறாகத்தான் அனேக இடங்களில் நடக்கிறது.வயதான பெற்றோர்களை பலர் முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடுகின்றனர்.பல பெற்றோர்கள் பிள்ளைகளை வசதியாக வாழ வைத்துவிட்டு தங்கள் வாழ்கையை நரகமாக கழித்துக் கொண்டிருக்கின்றனர்.


ஆனால் இன்றும் தனது தாயை தோளில் சுமக்கும் ஒரு மகன் இருக்கிறான் என்றால் நம்ப முடிகிறதா.இவர் பெயர் பல்வீந்தர்சிங் . இவரது தாய்க்கு பார்வை போய்விட்டது.கடந்த இரண்டரை வருடங்களாக இவர் தனது தாயை தோளில்  சுமந்து பல்வேறு புனிதத் தலங்களுக்கு அழைத்து சென்று வருகிறார்.21 ஆம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு மனிதன் வாழ்வது அதிசயமாகத்தானே உள்ளது.

பெற்றோர்களை சுமக்காவிட்டாலும் பரவாயில்லை அவர்களுக்கு சுமை ஏற்படுத்தாமலாவது   நாம் வாழலாமே.

03 ஆகஸ்ட் 2012

ஏன் மழை பெய்யவில்லை?

இந்த கதையில வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.

பரதாபுரி என்னும் ஒரு அழகான ஊர் இருந்தது.மழை வளமும்  செல்வச் செழிப்பும் நிறைந்திருந்த அந்த ஊரில் திடீரென கடும் பஞ்சம் ஏற்பட்டது.மக்களிடம் பணம் இருந்தது ...ஆனால் சாப்பிட உணவு கிடைக்கவில்லை,குடிக்க நீர் கிடைக்கவில்லை.


எனவே ஊர் தலைவர்  தலைமையில் ஊரின் எல்லையில் அமைந்திருந்த அவ்வூரின் காவல் தெய்வத்திடம் சென்று ஊர் மக்கள்  முறையிட்டனர்.

அப்போது ஒரு அசரீரி ஒலித்தது .மக்களே இந்த ஊரில் நல்லவர்களாக இருந்த அனைவரும் கெட்டுப் போய்விட்டீர்கள் .அனைவரும் ஏதாவது ஒரு வகையில் தவறான வழியில் சம்பாதித்து வருகிறீர்கள்.உங்களுக்கு ஒரே ஒரு நாள் அவகாசம் தருகிறேன்...இன்னும் 24  மணி நேரத்திற்குள் அனைவரும் தவறான வழியில் சேர்த்த பணத்தை இந்த கோவிலில் கொண்டு வந்து சேர்த்துவிட வேண்டும் . அவ்வாறு செய்யவில்லையெனில் மேலும் பஞ்சத்தை அதிகமாக்கி அனைவரையும் கொன்றுவிடுவேன் என எச்சரித்தது.

உடனடியாக மக்கள் அனைவரும் தங்கள் தங்கள் வீடுகளை நோக்கி ஓடினர்.தவறான வழியில் சேர்த்த பணத்தையெல்லாம் கோவிலில் கொண்டு வந்து சேர்த்தனர்.

24  மணி நேரம் கடந்தது...எனினும் மழை வருவதற்குரிய எந்த அறிகுறியும் தென்படவில்லை .எனவே மக்கள் மீண்டும் கடவுளிடம் முறையிட்டனர்.

அப்போது மீண்டும்  அசரீரி ஒலித்தது.என் மீது தவறு இல்லை ...இந்த ஊரிலுள்ள அனைவரும் தவறான வழியில் சம்பாதித்த பணத்தை கொண்டு வந்து சேர்க்கவில்லை என்றது அசரீரி.

உடனே மக்கள் கூட்டத்தில் சுற்றுமுற்றும் பார்த்தனர்...அங்கே ஒரு ஓரத்தில் நான்கைந்து பேர் வெறும் கையுடன் நின்றுகொண்டிருந்தனர்.உடனே ஊர் தலைவர் அவர்களிடம் சென்று நீங்களெல்லாம் தவறான வழியில் ஒரு காசுகூட சம்பாதிக்கவில்லையா வெறும் கையுடன் நிற்கிறீர்கள் என்று அதட்டினார் .

அதற்கு அவர்கள் மன்னிக்கவேண்டும் தலைவரே நாங்கள் தவறான வழியில் சம்பாதித்த பணத்தையெல்லாம் வெளி  நாட்டில் பதுக்கிவிட்டோம்.அவை எல்லாவற்றையும் கப்பலில் ஏற்றி கொண்டு வர சொல்லியிருக்கிறோம் ...விரைவில் வந்துவிடும் ...அது வரை சற்று பொறுக்கவேண்டும் என வேண்டினர்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த  மக்கள் அனைவரும் தலையில் கை வைத்துக்கொண்டு கப்பலின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

01 ஆகஸ்ட் 2012

எரித்தாலும் ஆபத்து... புதைத்தாலும் ஆபத்து என்னதான் செய்வது மின்குப்பையை?

நன்றி: புதிய தலைமுறை 

அதிஷா

எப்போதும் இல்லாத அளவுக்கு மின்னணுக் கழிவுகள் தமிழகம் எங்கும் மலைபோல் குவிகின்றன. விளைவு, இந்திய அளவில் மின் கழிவு உற்பத்தியில் தமிழகத்திற்கு இரண்டாமிடம்!

ம் வருங்காலம் நம் கண்முன்னே நஞ்சுவைத்துக் கொல்லப்படுகிறது. நம்முடைய நிலத்தடி நீரும், மண்வளமும் விஷமாகின்றன. காரணம், மலைபோல் குவிந்துவரும் மின்-கழிவுகள் (E - WASTE). சென்ற ஆண்டு மட்டுமே 28,789 மெட்ரிக் டன் அளவுக்கு சென்னையில் மின்கழிவுகள் குவிந்துள்ளன. இந்த ஆண்டு இதன் அளவு இரட்டிப்பாகலாம் என எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள். இது அடுத்த இருபது ஆண்டுகளில் இரண்டு லட்சம் டன் என்னும் அளவுக்கு உயரும் என பயமுறுத்துகின்றனர். சென்னை நகரத்தில் மட்டுமே ஒவ்வொரு நாளும் 4,500 டன் மின்கழிவுகள் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது! இந்திய அளவில் மின்கழிவு உற்பத்தியில் சென்னைக்கு நான்காமிடம்.

சின்ன ரிமோட் கண்ட்ரோல் பழுதடைந்துவிட்டதா? அதை சரி செய்வதெல்லாம் ஃபேஷன் கிடையாது. தூக்கி குப்பையில் போடு. புதிது வாங்கிக்கொள்வோம். கம்ப்யூட்டர் மானிட்டர் தொடங்கி மிக்ஸி, எம்பி3 பிளேயர், கேமரா, லேப்டாப், செல்போன், டி.வி., டிவிடி பிளேயர், டிவிடி, விசிடிகள் என இன்னும் ஏகப்பட்ட மின் மற்றும் மின்னணு சமாச்சாரங்கள் அப்டேட் ஆக ஆக பழையவை குப்பைக்குச் செல்கின்றன அல்லது காய்லாங்கடையில் எடைக்கு போடப்படுகின்றன. இந்த மின்னணுக் கழிவுகளால் என்ன பிரச்சினை? அவற்றினால்  சுற்றுச்சூழல் எப்படிப் பாதிக்கப்படுகிறது? இவற்றால் நமக்கு என்ன பாதிப்புகள் உண்டாகும்? அணுக்கழிவுகளை விட இந்த மின்கழிவுகள் ஆபத்தானவை என்பதை அறிந்துகொள்ளாமலே நிறுவனங்கள்  சந்தைப்படுத்தும் புதுப்புதுப் பொருட்களை நாமும்  வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் இன்றைய கவலைக்குரிய நிலை.

மின்கழிவின் பூர்வாங்கம்!

மின்கழிவு என்பது ஏதோ செவ்வாய்க் கிரகத்திலிருந்து நம் பூமியைப் பாழாக்க பாய்ந்து வந்த விண்கல் கிடையாது. நாம் பயன்படுத்தி குப்பையில் போடும் காப்பர் ஒயர்களில் தொடங்கி பழைய மிக்ஸி, டி.வி., கணினி, மொபைல் போன், டிவிடி பிளேயர், ட்யூப் லைட், தொலைபேசி இன்னும் மின்சாரத்தால் இயங்கிக் கொண்டிருக்கிற எல்லாமே பயன்படுத்துவதற்கான தகுதியை இழக்கும்போது மின்கழிவாகி விடுகிறது. தமிழகத்தில் குவியும் இருபத்தியெட்டாயிரம் டன் மின்கழிவில் 60 சதவிகிதம் பழைய கணினிகள் மட்டுமே என்பது அதிர்ச்சித் தகவல்.

"வேகமாக வளரும் பொருளாதாரம், அது சார்ந்த புதுப்புது தொழில்நுட்ப வளர்ச்சிகள், அதிகரித்துவரும் நுகர்வுக் கலாச்சாரம் இவைதான் கடந்த பத்தாண்டுகளில் மின்கழிவுகள் மலைபோல் குவியக் காரணம்" என்கிறார் ‘டாக்ஸிக் லிங்க்ஸ்’ அமைப்பின் அருண்செந்தில்ராம்.

இவையெல்லாம் மக்காத குப்பைகளாக ஒருபுறம் குவிந்து கொண்டிருக்க, இவற்றை என்ன செய்வதென்று தெரியாமல் அரசு விழிபிதுங்கிப் போய் அலைகிறது. பழைய கணினிகளால் உண்டாகும் மின்கழிவின் அளவு மட்டுமே அடுத்த பத்தாண்டுகளில் 500 மடங்கு அதிகரிக்கும் என்கிறது ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் அறிக்கை.

காயலான் கடை வில்லன்கள்

உங்கள் வீட்டில் ஒரு பழைய மானிட்டரும் கீபோர்டும் மவுசும் பல நாட்களாய் கிடக்கின்றன. கொண்டுபோய் காயலான் கடையில் எடைக்குப் போட்டுவிடுகிறீர்கள். அதற்குப் பிறகு அவை என்னாகும் என்று தெரியுமா? நம்முடைய பழைய எலெக்ட்ரானிக் பொருட்கள் காயலான் கடையில் உடைத்து நொறுக்கப்படுகின்றன. அதிலிருக்கிற நல்ல விலை கிடைக்கிற இரும்பு, பிளாஸ்டிக், அலுமினியம் மாதிரியான பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதனால் பெரிய பாதிப்பில்லை. இதற்குப் பிறகு இவர்கள் கையாளுகிற முறைகள்தான் சுற்றுச்சூழலின் வில்லன்கள்.

பிவிசி ஒயர்களை எரித்து காப்பரை பிரித்தெடுப்பது, வெறும் கைகளால் கம்ப்யூட்டர் மானிட்டர் மற்றும் ஹார்டு டிஸ்க்குகளை கையாள்வது, அவற்றில் இருக்கிற விலை உயர்ந்த உலோகங்களை அமிலத்தைப் பயன்படுத்திப் பிரிப்பது போன்ற ஆபத்தான அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன. பயன்படுத்தக்கூடிய விலை கிடைக்கக்கூடிய பொருட்களைப்பிரித்தெடுத்தவுடன் மீதமுள்ளவை குப்பையில் கொட்டப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக இந்த சர்க்யூட் போர்டுகளைப் போட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கின்றனர். இதுதான் தமிழகம் முழுக்கவே தற்போதைய காயலான் கடைகளில் பயன்படுத்தப்படும் மறுசுழற்சி முறை! இவைதான் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய ஆபத்தை உண்டாக்கக் கூடியதாக உள்ளன. இதனால் இந்த மின்கழிவுகளைக் கையாள்பவர்களுக்கு மட்டுமின்றி, இந்தச் சமூகத்துக்கே மிகப் பெரிய ஆபத்து காத்திருக்கிறது.

பாதிப்பு என்ன?

நம் உடல்நலத்தையும் இவை விட்டு வைப்பதில்லை. ட்யூப் லைட்டுகளில் இருக்கிற பாதரசம் நம் கல்லீரலைப் பாதிக்கும் வலிமை கொண்டவை. பிரிண்டர் இங்குகளிலும் டோனர்களிலும் பயன்படுத்தப்படும் கேட்மியம் நம்முடைய கிட்னியை நேரடியாகப் பாதிக்கும் சக்தி கொண்டவை. மின்கழிவுகளில் பரவலாகக் காணப்படும் நஞ்சான பெரிலியம் நம்முடைய நுரையீரலை பாதிக்கச்செய்து புற்றுநோயை உண்டாக்குமாம்.

இந்த நச்சுப்பொருட்கள் நம்முடைய டிஎன்ஏவை கூட பாதிப்படையச் செய்யும் வலிமை கொண்டவை என எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

சீனாவின் ஜேஜியங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வறிக்கை, தவறான முறைகளில் கையாளப்படும் மின்கழிவுகளால் காற்றுமாசடைகிறது, அதனை சுவாசிக்கும் மக்களுக்கு டிஎன்ஏ பாதிப்பும், கேன்சரும் உண்டாகிறதென்றும் கூறுகிறது.

மறுசுழற்சி பண்ணுங்க!

இப்பிரச்சினைக்கு தற்போது முன்வைக்கப்படும் மிக முக்கியமான தீர்வு, ரீசைக்கிளிங் எனப்படும் மறுசுழற்சி முறை. நாம் பயன்படுத்தும் கணினியில் இருக்கிற மைக்ரோ பிராசசர் தொடங்கி, மொபைல் போன் வரைக்கும் எல்லா பொருட்களும் மறுசுழற்சிக்கு ஏற்றவைதான். இதன் மூலம் நல்ல லாபமும் கிடைக்கும். அதோடு, நம் கனிம வளங்களும் காக்கப்படும்.

நாம் பயன்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்களில் 90 சதவிகிதம் முழுமையாக மறுசுழற்சி செய்து மீண்டும் உபயோகிக்கக் கூடியவைதான். ஆனால் இந்தியாவில் கொட்டப்படும் நான்கு லட்சம் டன் மின்கழிவில் வெறும் நான்கு சதவிகிதம்தான் அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சியாளர்களிடம் செல்கிறது. மீதமுள்ள அனைத்தும் தவறானவர்களின் கைகளில் சிக்கி நிலத்தையும், நீரையும்,நம்மையும் மாசடையச் செய்கின்றன அல்லது மக்காத குப்பையாக மண்ணில் கொட்டப்படுகின்றன.

"சென்னையில் மட்டுமே 18 மறுசுழற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், அவை போதிய மின்கழிவுகள் கிடைக்காமல் ஏனோதானோ என்றுதான் இயங்குகின்றன. மறுசுழற்சிக்கு ஓரளவு செலவாகும். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்ய வேண்டியிருக்கும். அதனால், நாம் பழைய மின்கழிவுகளைப் பெற அதிகப் பணம் தர இயலாது.  ஆனால் அங்கீகாரம் பெறாத ஆட்கள், அரசு சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்பதால் அதிக விலை கொடுத்து இதைப் பெறுகின்றனர். பெரிய ஐ.டி. நிறுவனங்களும் அதிகமாக விலை கொடுப்பவருக்கே தங்களுடைய பொருட்களைக் கொடுப்பதால், எங்களால் திறம்பட எதையும் செய்ய முடிவதில்லை. இது கட்டுபடுத்தப்படவேண்டும்" என வருத்தத்தோடு கூறுகிறார் குளோபல் ரீசைக்கிளிங் நிறுவனத்தின் மலர்மன்னன்.

என்னதான் தீர்வு?

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற மறுசுழற்சி நிறுவனங்களிடம் நம்முடைய மின்கழிவுகள் சேரவேண்டும். இந்த மின்கழிவுகள் மிகச் சரியாக சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லாத வகையில் மறுசுழற்சி செய்யப்படவேண்டும். அதோடு, அந்த விவரங்கள் அனைத்தும் ஆண்டுதோறும் அரசால் ஆடிட் செய்யப்படவேண்டியதும் அவசியம்.

"எங்களிடம் கிடைக்கிற இந்த மின்கழிவுகளை ஆறு கட்டங்களாக மறுசுழற்சி செய்கிறோம். முதலில் வகைப்படுத்துதல், அவற்றில் பயன்தரும் பொருட்களைப் பிரித்தெடுத்தல், நச்சுத்தன்மை உள்ளவற்றை இனங்காணுதல், பாகங்களைப் பிரிப்பது, அவற்றை விதிமுறைகளின்படி மறுசுழற்சி செய்வது என இவை நடக்கிறது" என்கிறார் மலர்மன்னன்.

மின்கழிவுகள் தவறான கைகளில் சிக்குவதை கட்டுப்படுத்தவும், உற்பத்தியாளர்கள், நுகர்வோர், மறுசுழற்சியாளர்கள் என ஒவ்வொருவருக்குமானபொறுப்புகளையும் 2011ல் சட்டங்களாக இந்தியா அறிவித்தது. இவை கடந்த மே 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.

உற்பத்தியாளர்களுக்கு கிடுக்கிப்பிடி!

மின்னணுக் கழிவுகளை கையாளுதல் சட்டம் 2011 எக்ஸ்டென்டண்ட் புரொடியூசர் ரெஸ்பான்சிபிலிட்டி என்னும் வழிமுறையை அறிவுறுத்துகிறது. அதாவது உற்பத்தியாளரே மின்கழிவுக்கான பொறுப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதற்கென மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தமிழகத்தில் பல்வேறு மறுசுழற்சியாளர்களுக்கு லைசென்ஸ் வழங்கியுள்ளது. அவர்களிடம் மட்டுமே உற்பத்தியாளர்கள் தங்களுடைய மின்கழிவுகளை அளித்து மறுசுழற்சி செய்ய வேண்டும் என்றும் சட்டம் சொல்கிறது. ஒவ்வொரு உற்பத்தி நிறுவனமும் தங்களுடைய பொருட்களுக்கான குப்பைகளைப்பெற கலெக்‌ஷன் சென்டர்களை உருவாக்கவும் அது வலியுறுத்துகிறது. இதையடுத்து டெல், சாம்சங், எச்.பி. மாதிரியான பெரிய நிறுவனங்கள் இதனை செயல்படுத்த தொடங்கியுள்ளது நல்ல தொடக்கமாக உள்ளது. டெல் நிறுவனம் தங்களுடைய லேப் டாப்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் ஐயான் பேட்டரிகளை பெற்றுக்கொண்டு புதிய பேட்டரிகள் வாங்கும்போது 500 ரூபாய் வரை தள்ளுபடி வழங்குகிறது.

நோக்கியா நிறுவனம் நாடு முழுக்க 1,500 இடங்களில் தங்களுடைய பழைய செல்போன்களை பெறும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. எச்.பி. நிறுவனம் உபயோகித்த கேட்ரிஜ்களை வாங்கி மறுசுழற்சி செய்து, புதிய கேட்ரிஜ்களை விற்கிறது.

"பெரிய நிறுவனங்கள் இவற்றையெல்லாம் செய்தாலும், திரும்பப் பெறப்படும் மின்கழிவுகள் முறையான வழிகளில் மறுசுழற்சிக்கு செல்கிறதா என்பதையும் அரசு கண்காணிக்க முன்வரவேண்டும்" என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரான நித்யானந்த் ஜெயராமன்.

தேவை விழிப்புணர்வு

"சென்னையில் மட்டுமே பல ஆயிரம் டன் அளவுக்கு மின்கழிவுகளைக் குவிக்கிறோம். மின்கழிவுகளில் உள்ள நச்சுப் பொருட்கள், அதனால் நமக்கும் சுற்றுச்சூழலுக்கும் உண்டாகும் பாதிப்புகள் குறித்து நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அடுத்த தலைமுறை குழந்தைகளிடம் இதுகுறித்துப் பேசவேண்டும். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இதைப்பற்றி போதிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்" என்கிறார்,‘டாக்ஸிக் லின்க்’ அமைப்பின் அருண் செந்தில்ராம்.

கர்நாடகா ஏற்கெனவே விழித்துக் கொண்டுவிட்டது. மங்களூருவில் வீட்டுக்கு வீடு மின்கழிவுகளைப் பெறும் வசதியை அரசே ஏற்படுத்தியுள்ளது. மக்களிடம் தொடர்ந்து இதுகுறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. பெறப்பட்ட குப்பைகள் உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு மறுசுழற்சிக்குச் செல்கின்றன. அரசு இதுபோன்றமுன்மாதிரி திட்டங்களை நாடுமுழுக்க செயல்படுத்த முன்வரவேண்டும்.

ஈகோ ஏடிஎம்!

சென்ற மாதம் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான கண்காட்சியில் ஈகோ ஏடிஎம் (ECO ATM–) என்னும் இயந்திரம் அனைவரையும் கவர்ந்தது. இந்த இயந்திரம் பழைய எலெக்ட்ரானிக் பொருட்களைப் பெற்றுக்கொண்டு பணம் தரும் ஏடிஎம் மெஷின் போல இயங்கும். தேவையற்ற செல்போன்கள், ஐபாட், ஐபேட், எம்பி3 பிளேயர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களை இதில் போடவேண்டும். அதற்கான டிரேயில் முதலில் பொருளை வைக்க வேண்டும். சில வினாடிகளில் அதைக் கருவி உள்ளிழுத்துக் கொள்கிறது. அதைப் பல கோணங்களில் ஸ்கேன் செய்து தரத்தை மதிப்பிடுகிறது. அதற்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற தகவல் திரையில் மின்னுகிறது. தொகை நமக்கு ஓ.கே. என்றால் அதற்கான பட்டனை அழுத்த வேண்டும். உடனே பணம் வெளியே வரும். தொகை கட்டுப்படி ஆகாவிட்டால் கேன்சல் என அழுத்தவேண்டும். பொருள் வெளியே வந்துவிடும். பில் போவெல்என்ற விஞ்ஞானி இதை வடிவமைத்துள்ளார். கணிசமான பழைய பொருட்கள் சேர்ந்த பிறகு, அவை அகற்றப்படும். சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் அந்தப் பொருட்களில் இருந்து பிளாஸ்டிக், உலோகங்கள் என தனித் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படும். ரொம்ப நல்ல ஐடியா இல்லையா?

105 நாடுகளின் குப்பைத்தொட்டி!

ம்மூர் குப்பைகளையே சமாளிக்கத் திணறும் அதேவேளையில் வளர்ந்த நாடுகளின் மெகா சைஸ் குப்பைத்தொட்டியாகவும் இந்தியா இருக்கிறது என்பது அதிர்ச்சிகரமான உண்மை. கிட்டத்தட்ட 105 நாடுகளின் குப்பைத்தொட்டியாக இந்தியா விளங்குகிறது. குஜராத் அருகே உள்ள புரோபோ கோலா என்ற துறைமுகத்தில் தான் அதிகளவில் உலக நாடுகளின் விஷத்தன்மை கொண்ட கழிவுப் பொருட்கள் தேங்கிக் கிடக்கின்றன . 380,000 டன் எலெக்ட்ரானிக் கழிவுப் பொருட்கள் 2007ல் இந்தியாவில் கொட்டப்பட்டுள்ளன.  இது 2012ல் 8,00,000 டன்னாக அதிகரிக்கும் என, ‘கிரீன்பீஸ் இந்தியா’ என்ற அமைப்பு தெரிவிக்கிறது. ஏன் வெளிநாடுகள் இந்தியாவுக்கு குப்பையை அனுப்ப வேண்டும்? ஒரு டன் குப்பையை சுத்திகரித்து மறுசுழற்சி செய்ய 12 ஆயிரம் ரூபாய் செலவாகும். கப்பலில் ஏற்றி இங்கே அனுப்பிவிட ஆகும் செலவு வெறும் 2,800 ரூபாய்தான்!

நாம் செய்ய வேண்டியதென்ன?
  • எப்பேர்ப்பட்ட அதிநவீனத் தொழில்நுட்பமே வந்தாலும் எந்தப் புதிய பொருளையும் வாங்குவதற்கு முன் அது நிச்சயமாக நமக்கு உபயோகம்தானா என்பதை நிறையவே யோசிக்க வேண்டும்.
  • முடிந்தவரை உங்களிடமுள்ள பொருட்களை செகண்ட் ஹேண்ட்டாக விற்க முயற்சி செய்யலாம்(விலை குறைவாகக் கிடைத்தாலும் அந்தப் பொருளின் ஆயுளை அது அதிகரிக்கும்).
  • உங்களிடம் லேப் டாப்போ, செல்போனோ, பழைய டி.வி.யோ இருக்கிறதென்றால் அதை யாருக்கும் விற்க மனமில்லையென்றால் அதை வாங்க வசதியில்லாத ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுக்கலாம்.
  • பழுதடைந்த பொருட்களை சரிசெய்ய முனையலாம்.
  • எக்ஸ்சேஞ்ச் மாதிரியான திட்டங்களில் உற்பத்தியாளரிடமே கொடுத்து புதிய பொருட்களை வாங்கலாம்.
  • மின்சாதனங்களை தவறியும் காய்லாங்கடைகளில் போடுவதை தவிர்க்கவும்.

31 ஜூலை 2012

பாக்கெட் குடிநீர் அருந்துபவர்களா நீங்கள்....

உலகில் பரவும் பெரும்பாலான நோய்கள் தண்ணீர் மூலமாகத்தான் பரவுகின்றன.கண்ணுக்குத் தெரியாத பல நோய்க் கிருமிகள் நிறைந்த நீரை அருந்துவதால் பல்வேறு  நோய்களுக்கு ஆளாகி பலர் இன்னல் படுகின்றனர்.

தற்காலத்தில் பிரயாணங்களின் போது பலர் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப் பட்டு விற்கப் படும் குடிநீரை வாங்கி அருந்துகின்றனர். பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பல்வேறு அரசு தரச் சான்று முத்திரைகளெல்லாம் பொறிக்கப் பட்டிருக்கும்.ஆனால் அவை சுகாதாரமானதாகவோ தரமானதாகவோ இருக்கும் என்று நீங்கள் நம்பி அடிக்கடி அதை வாங்கி அருந்தினால் உங்களுக்கு பேராபத்து காத்திருக்கிறது.குடி நீர் பிளாஸ்டிக் கவரில்  அடைக்கப் பட்டாலே ஆபத்துதான்...அதிலும் சுகாதாரமற்ற நீர் அடைக்கப் பட்டால் ???


இரண்டு நாட்களுக்கு முன்பாக எனது நண்பர் திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் சென்றிருக்கிறார்.அங்கு தாகத்தை தணிக்கும் நிமித்தம் ஒரு பெட்டிக் கடையில் பாக்கெட் குடிநீர் வாங்கியிருக்கிறார் .

அதை குடிக்க முனைகையில் அந்த நீரினுள் ஒரு கொசு இறந்து கிடப்பதைப் பார்த்திருக்கிறார்.அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அந்த பாக்கெட்டை தன்னுடன் பத்திரமாக எடுத்துச் சென்று சுகாதார அலுவலர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். 

 
தண்ணீர் பாக்கெட்டினுள் கொசு 



சம்மந்தப் பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா  என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

25 ஜூலை 2012

இப்படியும் ஒரு மாமனிதர்!

கோவை ம.யோகநாதன். 
 
கோவையை சேர்ந்த பேருந்து நடத்துனரான இவர் கடந்த 25 வருடங்களில் ஒரு லட்சம் மரங்கள் நட்டு சாதனை தமிழராக வலம் வருகிறார். 
 
 
இவரின் சொந்த ஊர் மயிலாடுதுறை. கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார் . 
 
மரக் கன்றுகளை நடுவதொடு விட்டுவிடாமல் ஒரு ஆண்டுவரை மரங்களை பாதுகாத்து, பராமரிக்கும் விதத்தையும் சொல்லி கொடுக்கிறார். சுதேசியாக வாழும் இவர் வெளிநாட்டு மரக் கன்றுகளை தொடுவதில்லை என்பதில் வைராக்கியம் உள்ளவர். தனது வருமானத்தில் பெரும் பகுதியை இந்த பசுமை வேள்விக்கே செலவிடுகிறார். மரம் வெட்டும் கொடுமையை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தியுள்ளார்.

வார விடுமுறையான ஒவ்வொரு திங்கட்கிழமையும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் புகைப்படக்காட்சி(Slide Show) நடத்தி விழிப்புணர்வு புரட்சி செய்து வருகிறார். 
 
இதுவரை 3000 பள்ளிகளுக்கு மேல் விஞ்ஞான விளக்கப் படக் காட்சி நடத்தி இருக்கிறார். 
 
 
இவரின் இந்த சேவைக்காக, தமிழக அரசு, 2008ல் "சுற்றுச்சூழல் செயல் வீரர் விருது" , குடியரசு துணைத் தலைவரிடமிருந்து, 2010ல் "பசுமைப் போராளி விருது", "சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் விருது' உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

ஒவ்வொரு மாணவரும், தன் பிறந்த நாளன்று, ஒரு மரக்கன்றை நட்டு, பராமரித்து வளர்த்து வரும் வகையில், "உயிர் வாழ ஒரு மரம்'”என்ற திட்டத்தை உருவாக்கி, இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேலான பள்ளி, கல்லூரி மாணவர்களை சேர்ந்துள்ளார். 
 
 
இவரின் சேவையை கண்டு வெளிநாட்டவர் ஒருவர் இவருக்காக ஒரு இணையதளம்  இலவசமாக அமைத்து தந்திருக்கிறார்.
 
தகவல் உதவி: திரு சண்முக சுந்தரம்-முகநூல் 

படங்கள் உதவி: கூகுள் 


19 ஜூலை 2012

பாபுவும் டீச்சரும் -ஜோக்ஸ்


டீச்சர்: பாபு ....நீரினுடைய வேதியல் பெயர் சொல்லு பாக்கலாம் 

பாபு: HIJKLMNO  

டீச்சர்: என்னாச்சி  பாபு ....நான் எதையோ கேட்டா நீ எதையோ சொல்ற...

பாபு: நேற்று நீங்கதானே டீச்சர் சொன்னீங்க நீரோட வேதியல் பெயர் H to O ன்னு 
-------------------------------------------------------------------------------------------------------------------------------

டீச்சர்:(பாபுவிடம் உலக வரை படத்தைக் காட்டி) பாபு இதில் அமெரிக்காவைக் காட்டு பாக்கலாம் 

பாபு: இதுதான் அமெரிக்கா டீச்சர் (சரியாக காட்டுகிறான்)

டீச்சர்: வெரி குட் ....இப்போ அமெரிக்காவை கண்டு பிடிச்சது யாருன்னு சொல்லு பாக்கலாம் 

பாபு: அதிலென்ன சந்தேகம் ...நான்தான் கண்டு பிடிச்சேன் 

-------------------------------------------------------------------------------------------------------------------------------

டீச்சர்: பாபு... I  -ங்கிற வார்த்தையில தொடங்கி ஒரு வாக்கியம் சொல் பாக்கலாம் 

பாபு: I  is  ....(தொடர்ந்து ஏதோ சொல்ல முற்படுகிறான்) 

டீச்சர் : தப்பு பாபு I -க்கு அப்புறமா is  வராது am  தான் வரும்...சரியா சொல்லு 

பாபு: I am the ninth letter of the alphabet  

----------------------------------------------------------------------------------------------------------------------

டீச்சர்: உண்மையை சொல்லு பாபு ...நீ சாப்பிடுறதுக்கு முன்னாடி கடவுளை ஜெபிக்கிறது உண்டா?

 பாபு: என்னோட அம்மா உண்மையிலேயே நல்லா சமைப்பாங்க அதனால நான் ஜெபிப்பதில்லை 

----------------------------------------------------------------------------------------------------------------------

டீச்சர்: கடைசியா ஒரு கேள்வி பாபு...உனக்கு  பிடிக்காவிட்டாலும்  எதையாவது பற்றி உன்னிடம் பேசிக்கொண்டிருப்பவர்களை எப்படி அழைப்பாய்? 

பாபு: டீச்சர்  

------------------------------------------------------------------------------------------------------------------------------
*******************************************************************************

18 ஜூலை 2012

கடாஃபியின் கடைசி நிமிடங்கள் : புதிய வீடியோ

லிபிய அதிபராக இருந்த கடாஃபி கடந்த ஆண்டு அக்டோபர் 20  ல் கொல்லப்பட்டார் .தற்போது அவர் கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்டதாக கூறப்படும் புதிய  வீடியோ  வெளியாகியுள்ளது .



13 ஜூலை 2012

உங்கள் கணினியைப் பற்றி துல்லியமாக அறிய இலவச மென்பொருள் !

ccleaner,defraggler போன்ற கணினிக்கு மிகவும் பயனுள்ள மென்பொருட்களை இலவசமாகக் கொடுத்த Piriform  நிறுவனம் தற்போது கணினியின் செயல்பாடுகள்  மற்றும் கணினியில் நிறுவப் பட்டுள்ள ஹார்டுவேர் மற்றும் ஆப்பரேடிங் சிஸ்டம் பற்றி தெளிவாக அறிந்துகொள்ளும் வகையில் Speccy  எனும் மென்பொருளை தற்போது இலவசமாக வழங்குகிறது.


கணினியின் வன்பொருட்களின் விபரங்களைத் தருவதோடு மட்டுமல்லாது அவற்றின் தற்போதைய வெப்பநிலை குறித்த தகவல்களையும் துல்லியமாகத் தருகிறது.

தேவைப் படுவோர் இங்கு கிளிக் செய்து மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள்.

20 ஜூன் 2012

ஆயிரம் பொய் சொல்லி அணு உலை கட்டவோ ?

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கி உலையை திறக்க மத்திய மாநில அரசுகள் எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டதாக ஒரு மாயத் தோற்றம், மீடியா பத்திரிகைகள் வழியே சில மாதங்களாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

அது பாதி உண்மைதான். முழு உண்மை அல்ல. பெருமளவில் போலீசையும் முப்படைகளையும் அந்தப் பகுதியில் குவித்து, அறவழியில் போராடிவரும் மக்கள் மீது உணவு முற்றுகை நடத்தி, நிரந்தரமாக 144 தடை உத்தரவு போட்டு, அரசுகள் செய்யமுடிந்ததெல்லாம் – அணு உலை வளாகத்திற்கு ஊழியர்களையும் ‘விஞ்ஞானிகளை’யும் வேலை செய்ய அனுப்ப முடிந்தது மட்டும்தான்.

மொத்தம் 55 ,795 பொதுமக்கள் மீது எஃப்.ஐ.ஆர் போட்டு, அதில் 680 பேர் மீது ராஜத் துரோக வழக்கு பதிவு செய்தும் கூட அரசுகளால் கூடங்குளம் இடிந்தகரை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களின் உறுதியைக் குலைக்க முடியவே இல்லை. பல முறை முயற்சித்தும் போராட்டக் குழு தலைவர்களான உதயகுமாரையும் புஷ்பராயனையும் கைது செய்ய முடியவில்லை. அற வழியில் போராடும் மக்களை எப்படியாவது வன்முறையில் ஈடுபடத் தூண்டும் அத்தனை முயற்சிகளும் தோற்றன.
 
தொடர்ந்து 300 நாட்களைக் கடந்து மக்கள் போராடிக் கொண்டேதான் இருக்கிறார்கள். உண்ணாவிரதம் மட்டும் அவர்களின் போராட்ட வழியல்ல. நீதிமன்றங்கள் மூலமும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழு தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறது.

இதனால் அடுத்தடுத்து அரசுகளின் பொய்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகிக் கொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டில் இருக்கும் மின்சார தட்டுப்பாட்டை கூடங்குளம் அணு உலை செயல்பட்டால்தான் போக்கமுடியும் என்றும் ஜூன் மாதத்தில் உலை செயல்படத் தொடங்கியதும் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வந்துவிடும் என்றும் அமைச்சர் நாராயணசாமி இடைவிடாமல் பொய் சொல்லிவந்தார்.

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு சற்றே ஜூன் மாதத்தில் குறைந்தது. ஆனல் காரணம் கூடங்குளம் அணு உலை அல்ல. காற்றாலைகள்தான் பெருமளவில் மின் தட்டுப்பாட்டை தணித்தன. கூடங்குளம் அணு உலை இன்னும் இயங்கவே தொடங்கவில்லை. ஆனால் அமைச்சரும் அணுசக்தி அதிகாரிகளும் பொய் சொல்வது மட்டும் தொடர்கிறது. இன்னும் 15 நாட்களில் அணு உலை இயங்கும் என்று நாராயணசாமி சொன்ன அதே நாளில், அணுசக்தித் தலைவர் ஆகஸ்ட் இறுதியில்தான் இயக்கமுடியும் என்று பேட்டி அளிக்கிறார்.

உலையை இயக்குவதில் பல சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நீதிமன்றங்கள் முன்னர் எழுப்பப்பட்டுள்ளன. சர்வதேச அணுசக்தி முகமை விதித்திருக்கும் விதிகளைப் பின்பற்றாமல், உலையை இயக்குவதற்கான அனுமதியை இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் வழங்க முடியாது.

எனவே விதிகளைப் பின்பற்றுவதாக பொய் சொல்வது, நாடகம் ஆடுவது என்ற நடவடிக்கைகளில் அணுசக்தித் துறையும் அரசுகளும் இறங்கியுள்ளன.

அணு உலையை சுற்றி 25 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு விபத்து ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய பயிற்சியை, ஒத்திகையை நடத்தி முடிக்காமல், அணு உலையில் எரிபொருளை நிரப்பமுடியாது என்பதே விதி. இந்த பேரிடர் மேலாண்மைப் பயிற்சியை அனைத்து கிராமங்களுக்கும் வழங்காமல் உலையை இயக்கக் கூடாது என்றுதான் மூன்று மாதமாக போராட்டக் குழுவினர் கேட்டு வருகின்றனர்.

விபத்து ஏற்பட்டால், மக்களை இடம்பெயர்க்கவும், தயார்ப்படுத்தவும் செய்யவேண்டிய வழிமுறைகளுக்கென்று ஒரு கையேடு (மேனுவல்) இருக்கவேண்டும். அதை அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியமும் மாவட்ட நிர்வாகமும் ஜூன் 2011லேயே படித்து ஒப்புதல் கொடுத்துவிட்டதாக வாரியத் தலைவர் பட்டாச்சார்யா இப்போது ஏப்ரல் 17 அன்று எழுதிய கடிதத்தில் சொல்கிறார்.
ஆனால் இந்த மேனுவலின் பிரதியை அளிக்கும்படி உதயகுமார், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கலெக்டருக்கும் அணு உலை நிர்வாகத்துக்கும் விண்ணப்பித்தும் மேனுவல் தரப்படவே இல்லை.

ஆனால் இந்த ஜூன் 9 அன்று அணு உலைக்கருகே இருக்கும் கிராமத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சியும் ஒத்திகையும் நடத்தப்பட்டுவிட்டதாக அணுசக்தி துறை அறிவித்திருக்கிறது. அணு உலைக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது இடிந்தகரை. அடுத்த ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருப்பவை கூடங்குளம், வைராவிகிணறு, செட்டிகுளம், ஸ்ரீரங்கநாராயாணபுரம் , பெருமணல், கூத்தப்புளி ஆகியவை. இந்த எந்த கிராமத்திலும் ஒத்திகை நடத்தப்படவில்லை.
 
உலையிலிருந்து ஏழு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் நக்கநேரி என்ற கிராமத்துக்கு மாவட்ட அதிகாரிகளும், அணு உலை அதிகாரிகளும் வருகிறார்கள். ஊரில் பெரும்பாலோர் வேலைக்குப் போயாகிவிட்டது. எஞ்சியிருப்பது எழுத்தறிவற்ற கொஞ்சம் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே. இவர்களுடன் ஒரு மணி நேரம் பேசிவிட்டு. அதிகாரிகள் படை கார்களில் ஏறி போய்விட்டது. இதுதான் பயிற்சி , ஒத்திகை நடந்த லட்சணம்.

என்ன பேசப்பட்டது ? அணு உலையில் விபத்து ஏற்பட்டால் எப்படியெப்படி தப்பித்து ஓட வேண்டும் என்று பேசியதாக மக்கள் சொல்லவில்லை. டெங்கு காய்ச்சல் பற்றி விசாரித்தார்கள். உங்கள் பஞ்சாயத்துக்கு என்ன திட்டம் வேண்டும் என்று விசாரித்தார்கள் என்று அந்த பஞ்சாயத்து தலைவரே சொல்லியிருக்கிறார். கொஞ்சம் அயோடின் மாத்திரைகளை சாப்பிட்டால் கதிர் வீச்சு எதுவும் செய்யாது என்று சொன்னார்கள் என்ற அளவில்தான் நக்கநேரியில் அப்போது இருந்த சுமார் 100 பேரிடம் விசாரித்ததில் தெரியவந்துள்ளது.

இந்த பயிற்சியில் மூன்று கட்ட நடவடிக்கையாக எப்படி பேரிடரை சமாளிப்பது என்று மக்களுக்கு சொல்லப்பட்டதாக அணு உலை நிர்வாகமும் மாவட்ட கலெக்டரும் சொல்கிறார்கள்.ஓர் அணு உலை விபத்து ஏற்பட்டால் உடனே என்னென்ன செய்யவேண்டும் என்பது பிரும்மாண்டமான விஷயம். மக்களை பல கிலோமீட்டர் தொலைவுக்கு அழைத்துச் செல்ல பஸ்களை ஏற்பாடு செய்யவேண்டும். மிகக் குறைந்த நேரத்தில் அவை வந்து சேரவேண்டும். மத்திய கண்ட்ரோல் செண்ட்டர் அமைக்கப்பட்டு அங்கிருந்து மாவட்டம் முழுவதும் போலீஸ், வருவாய்த் துறை ஊழியர்களுடன் ஹாட் லைனில் தொடர்பில் இருக்க வேண்டும். வீட்டைவிட்டு ஓடும்போது என்னென்ன எடுத்துக் கொள்ளவேண்டும் எதையெல்லாம் எடுக்கத் தேவையில்லை என்ற பட்டியலை மக்களுக்கு சொல்லித் தரவேண்டும். இப்படி பல அம்சங்கள் உள்ளன. இது எதையும் செய்யாமல், பயிற்சியும் ஒத்திகையும் செய்யப்பட்டுவிட்டதாக அரசுகள் கூசாமல் பொய் சொல்லியிருக்கின்றன. (சுமார் 10 வருடம் முன்பு கல்பாக்கத்தில் இப்படி ஒரு ஒத்திகை நடத்தப்பட்டபோது பஸ் பிரேக் டவுன் ஆகிவிட்டது. எம்ர்ஜென்சி டிரில் நடப்பதே தனக்குத் தெரியாது என்று ஓர் மாவட்ட அதிகாரி சொன்னார். கண்ட்ரோல் ரூமில் போன் வேலை செய்யவில்லை. இப்போது நடத்தப்பட்ட ஒத்திகை அந்த அளவுக்குக் கூட இல்லை.)

இனி அடுத்த பயிற்சியும் ஒத்திகையும் 2014ல் நடத்தப்படும் என்று வேறு அணு உலை இயக்குநர் அறிவித்திருக்கிறார். அணு உலையை சுற்றி வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு எந்த பயிற்சியும் தராமலே உலையை இயக்க அவசரப்படுகிறது அரசு.
 
அரசின் பொய்கள் தொடர்கின்றன.

தகவல் அறியும் உரிமை ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் போராடிப் போராடி கடைசியில் சைட் எவால்யுவேஷன் ரிப்போர்ட் எனப்படும் இட மதிப்பீட்டு அறிக்கையை அரசு தமக்கு தரவைத்திருக்கிறது போராட்டக் குழு. அணு உலைக்காக இடம் தேர்வு செய்த அடிப்படை என்ன என்பதற்கான அறிக்கை இது. ஆனால் இது ரஷ்ய கம்பெனிக்கு சொந்தமானது என்றும் அதை வெளியிட முடியாது என்றும் அரசு கூறி வந்தது.

கடைசியில் அரசு கொடுத்த அறிக்கை வெறும் 12 பக்கங்கள். அதிலும் நடுவே மூன்று பக்கங்கள் மிஸ்சிங். அறிக்கை தயாரிக்கப்பட்டது எண்பதுகளில். அறிக்கையை யார் எழுதினார்கள் என்ற பெயர்கள் விவரங்கள் எதுவும் கிடையாது. இந்த அறிக்கைப் படி உலைக்கு பத்து கிலோமீட்டர் சுற்றளவில் பத்தாயிரம் பேர் வசிக்கும் எந்த ஊரும் இல்லை என்று ஒரு பெரிய பொய் சொல்லப்பட்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையிலிருந்து இரு குழாய்கள் வழியே உலைக்கு நீர் எடுக்கப்படும் என்கிறது இந்த அறிக்கை. கழிவுகள் கடலில் விடப்படும் என்றும் சொல்கிறது.

முழுமையான தகவல்கள் எதுவும் இல்லாமல், ஒப்புக்கு ஒரு அறிக்கையை அளித்திருக்கிறது அரசு. மக்களை ஏமாற்றுவது, நீதிமன்றத்துக்கு சென்றால், அதையும் ஏமாற்ற பெயரளவில் ஆவணங்களைக் காட்டி ஏமாற்றுவது, சர்வதேச அணுசக்தி முகமையை ஏமாற்ற ஒப்புக்கு ஒத்திகை நடத்துவது என்று எல்லாரையும் எப்படியாவது ஏமாற்ற தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறது மத்திய அரசு. அதற்கு உடந்தையாக இருக்கிறது மாநில அரசு.

மிக ஆபத்தான ஒரு தொழில்நுட்பத்தோடு விளையாடுகிறோம்; மக்களின் உயிரோடு விளையாடுகிறோம் என்ற எச்சரிக்கை உணர்ச்சி அரசுக்கும் அனுசக்தி அதிகாரிகளுக்கும் இருப்பதாகவே தெரியவில்லை. கூடங்குளத்தில் நிறுவப்படும் உலைகளின் அமைப்பு பற்றியே இப்போது சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. ரியாக்டர் பிரஷர் வெஸ்சல் எனப்படும் அணு உலை அழுத்தக் கொள்கலனில் நடுவே எந்த வெல்டிங்கும் இருக்காது என்று 2006ல் ரஷ்யாவுடன் போட்ட ஒப்பந்த ஆவணங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது அணு சக்தி கட்டுப்பாட்டு வாரியம் கொள்கலனில் இரு இடங்களில் வெல்டிங் உள்ளதாக சொல்கிறது. இப்படி வெல்டிங் செய்யப்படும் இடங்களில் வெல்டிங் பொருட்கள் பலவீனமானவை என்பதால் பெரும் விபத்துக்கு வாய்ப்பிருப்பதாக முன்னர் கருதப்பட்டு, புதிய உலை வடிவமைப்புகளில் வெல்டிங் இல்லாத கொள்கலன்கள் உருவாக்கப்பட்டன. கூடங்குளத்துக்கு வழங்கப்படுவது அதி நவீன உலை என்று சொல்லப்பட்டது. ஆனால் பழைய மாதிரி வெல்டிங் உள்ள கலன்களே நிறுவப்பட்டுள்ளன. இதை பரிசோதித்துப் பார்த்து பழைய டிசைன் என்றால் மாற்றச் சொல்ல வேண்டும். ஆனால் எரிபொருள் நிரப்பி உலை இயங்க ஆரம்பித்துவிட்டால், கலனை எடுத்து சோதிக்கவே முடியாது.விபத்துகள் ஏற்பட்டால், ரஷ்ய கம்பெனிக்கு அதில் பொறுப்பு எதுவும் இல்லை என்ற பிரச்சினை வேறு தீர்க்கப்படாமலே இருக்கிறது.

ஆனால் ஏதாவது பொய் சொல்லி அணு உலையை நிறுவியே தீருவது என்று இருக்கும் அரசு இன்னொரு பக்கம், இந்த அணு உலைகளை எதிர்க்கும் மக்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாகக் கருதுகிறது. அறவழியில் 300 நாட்களாக ஆயிரக்கணக்கானோர் போராடுவது பைத்தியக்காரத்தனம்தான் என்று அரசு நினைப்பதில் ஆச்சரியமே இல்லை.
 
எனவே பெங்களூருவில் இருக்கும் நிம்ஹான்ஸ் எனப்படும் மனநோய் ஆய்வு நிலைய மருத்துவர்களை இடிந்தகரைக்கு அரசு அனுப்பியிருக்கிறது. மக்கள் இப்படி பிடிவாதமாகப் போராடுவதன் உளவியல் என்ன என்று ஆராய்ந்து அதை ‘குணமாக்க’ (உடைக்க) வழிகள் என்ன என்று சொல்லும்படி மருத்துவர்கள் கோரப்பட்டுள்ளனர்.

அண்மையில் ஒரு ஆத்திக நண்பர் பேஸ்புக்கில் ஒரு குறிப்பு எழுதினார் – பெரியாரோ பகுத்தறிவு இயக்கங்களோ என்னை நாத்திகனாக்கவில்லை. ஆனால் நித்தி, மதுரை ஆதீனம் போன்றோர் அதை நோக்கி என்னைத் துரத்துகிறார்கள் என்று. எனக்கு இப்படி சொல்லத் தோன்றுகிறது : எந்த ஆன்மிக குருவாலும், கோயிலாலும் என்னை ஆத்திகன் ஆக்கமுடியவில்லை. ஆனால் அணு உலையை அமைத்து மனித குல அழிவை விரைவுபடுத்தியே தீருவோம் என்று முரட்டுப் பிடிவாதத்தோடு இயங்கும் இந்திய அரசுகள் என்னைக் கடவுளை நோக்கித் தள்ளுகின்றன. என்னை, இடிந்தகரை மக்களை, ஜெயலலிதாவை, மன்மோகனை எல்லாரையும் அணு அழிவிலிருந்து அந்தக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று புலம்ப ஆரம்பித்துவிடுவேனோ ?!

 நன்றி : திரு.ஞானி  கல்கி வார இதழ் 16.6.2012

15 ஜூன் 2012

மரம் வளர்ப்போம் -ஆயுள் வளர்ப்போம்

    உலகிலுள்ள உயிரினங்களுக்கு எந்த ஒரு பிரதிபலனும் பாராது உதவி செய்யும் நண்பர்கள் யாரென்றால் அவை மரங்கள்தான்.மரங்கள் நமக்கு செய்யும் நன்மைகளை சற்று புள்ளி விபரமாகத் தெரிந்துகொண்டால் அனைவருக்கும் மரம் வளர்க்கும் ஆர்வம் மேலோங்கும்.


  • ஒரு மரம் வருடத்திற்கு 118 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது.

  •    ஒரு ஏக்கரில் உள்ள மரங்களிலிருந்து ஒரு வருடத்திற்கு வெளியிடப்படும் ஆக்சிஜன் 18 பேர் ஆயுள் முழுவதும் சுவாசிக்க உதவுகிறது .
  • ஒரு ஏக்கரில் உள்ள மரங்கள் ஒரு வருடத்தில் 2.5 டன் கார்பன் டை ஆக்சைடை காற்றிலிருந்து உறிஞ்சிக்கொள்கின்றன. 
  • நிழல் தரும் ஒரு மரம் வெயில் காலத்தில் 20 டிகிரி அளவுக்கு வெப்பத்தைக் குறைக்கின்றன.

   இத்தனை நன்மைகள் தரும் மரங்களை நாம் எவ்வளவுக்கெவ்வளவு வளர்த்து பராமரிக்கின்றோமோ அது நாம் நமது சந்ததிகளுக்கு செய்யும் மிகப் பெரும் புண்ணியமாக அமையும் .

11 ஜூன் 2012

பேரிடர் மேலாண்மை என்ற பெயரில் ஒரு பெரிய கேலிக்கூத்து!

பேரிடர் மேலாண்மையில் மிகவும் மோசமான நாடுகளின் பட்டியலைத் தேர்வு செய்தால் அதில் இந்தியாவுக்கு எப்போதுமே முக்கிய இடமுண்டு.

போபால் விஷ வாயுக் கசிவின் போதும்  சரி 2004  ம் ஆண்டு நடந்த சுனாமித் தாக்குதலின் போதும் சரி  பேரிடர் மேலாண்மை சரியாக இல்லாததால்தான்  பெரும் உயிரிழப்புகளை சந்திக்க நேர்ந்தது.

போபால் விஷ வாயுத் தாக்குதலின் போது மக்களைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு விபத்திற்கு காரணமான வாரன் ஆண்டர்சனை பத்திரமாக தனது நாட்டுக்கு அனுப்பி வைத்தது அன்றைய காங்கிரஸ் அரசு.

ஏற்கெனவே பல்வேறு பேரிடர்களிலிருந்து  பாடம் கற்பதை விட்டுவிட்டு தொடர்ந்து தவறு செய்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன நம் அரசுகள். 

சமீபத்தில் ஜப்பானில் ஒரு மிகப் பெரிய அணு உலை விபத்து நிகழ்ந்தது.அந்த நாடு பேரிடர் மேலாண்மையில் கொண்டிருந்த திறமையால் லட்சக்கணக்கான மக்கள் கதிர் வீச்சுத்  தாக்குதலில் இருந்து தப்பித்தனர்.


தற்போது மத்திய  அரசு நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியாவின் மிகப் பெரிய இரண்டு அணு உலைகளை செயல் படுத்தத் தயாராகி வருகிறது. அணு உலை எரி  பொருள் நிரப்புவதற்கு முன்னதாக இந்திய அணு சக்தி  ஒழுங்கு முறை ஆணையத்தின் விதி முறைகளின் படி அணு உலை அமைந்துள்ள பகுதி மக்கள் அனைவருக்கும் பேரிடர் பயிற்சி வழங்கவேண்டும் .

கூடங்குளம் அணு உலையை சுற்றி 30 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள்   10 லட்சம் பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். ஆனார் இவர்களில் எவர் ஒருவருக்கும் தெரியாதபடி பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடந்துள்ளது பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது .

கடந்த 9-6-2012   அன்று கூடங்குளம் அருகிலுள்ள 300 பேர் மட்டுமே வசிக்கும் நக்கநேரி  என்ற குக்கிராமத்திற்கு பேரிடர்    மேலாண்மை குழுவினர் சென்றுள்ளனர் அப்போது அங்கே பெரும்பாலானோர் கூலி வேலைகளுக்கு சென்றுவிட்டபடியால் சுமார் 100 பேர் மட்டுமே அவ்வூரில் இருந்துள்ளனர் . சேரன்மாதேவி உதவி ஆட்சியர் தலைமையில் போலிஸ் படையினருடன் சென்ற குழுவினர் அங்குள்ள மக்களிடம் மருத்துவ முகாம் நடத்த வந்திருப்பதாக கூறியுள்ளனர். அந்த பாமர மக்களுக்கு எதுவுமே விளங்காமல் இருந்திருக்கிறது.

இறுதியாக பலரிடம் கையெழுத்து பெற்றுள்ளனர். இச்செயல்கள் முடிந்ததும் கூடங்குளத்தில் பேரிடர் பயிற்சி வெற்றிகரமாக நடத்தப் பட்டுவிட்டதாகவும் , இனி யுரேனியம் நிரப்ப அனுமதி கிடைத்துவிடும் என்றும் கூறியுள்ளனர் அதிகாரிகள்.

கடந்த இரு மாதங்களுக்கு மேல் 144 தடை உத்தரவிற்குள் சிக்கித் தவிக்கும் கூடங்குளம் பகுதி மக்கள் மத்திய மாநில அரசுகள் கைகோர்த்தி செய்யும் இந்த அநியாயங்களை யாரிடம் முறையிடுவது என்று அறியாமல் திகைத்து வருகின்றனர்.

கூடங்குளத்துல விபத்து நடந்தா அவ்ளோதானா?

05 ஜூன் 2012

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பத்திரமாக்க பத்து வழிகள்!

திருமணமானபின்பு  பெரும்பாலோனோரின் கவலை அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும் .அதனால் வாழ்வின் பெரும்பகுதியை அவர்களுக்காகவே செலவழிக்கிறார்கள் . 

குழந்தைகளை படிக்க வைக்க சிரமப் படுகின்றார்கள், அவர்களுக்கு சொத்து சேர்த்து வைக்க சிரமப் படுகிறார்கள்.


ஆனால் எதிர்காலத்தில் நம் குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால்தானே நாம் கஷ்டப் பட்டதற்கான பலனை அவர்கள் அடைய முடியும். எதிர் காலத்தில் நம் சந்ததிகள் ஆரோக்கியமாக வாழவேண்டுமானால் இன்று நாம் நமது சுற்று சூழலைப் பாதுகாக்கவேண்டும் .

உலக சுற்று சூழல் தினமான இன்று சுற்று சூழலைப் பாதுகாக்க நம்மால் கடை பிடிக்க இயலக்கூடிய பத்து வழிகளைக் கூறுகின்றேன்.

1)இன்று சுற்று சூழலுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவது பிளாஸ்டிக் பைகள். எனவே பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை கூடுமான வரையில் தவிர்த்துவிடுங்கள்.கடைகளுக்கு பொருட்கள் வாங்குவதற்கு வீட்டிலிருந்தே துணிப் பைகளை எடுத்து செல்லுங்கள்.

2) அடுத்த அச்சுறுத்தல் வாகனப் புகை .நாகரீகமென்ற பெயரில் ஒருவருக் கொருவர் போட்டியிட்டு கார்களையும் பைக்குகளையும் வாங்கி சாலைகளை நிரப்பிவிட்டோம். பெட்ரோல் விலையை எவ்வளவு ஏற்றினாலும் தொடர்ந்து  வாகனங்களைப் பயன்படுத்தி வருகிறோம் .அவசியப் பட்டாலன்றி பைக்குகள் , கார்களை உபயோகிப்பதை தவிர்ப்போம்.

3 ) மரம் வளர்ப்போம் .மனித வாழ்க்கைக்கும் உலக சுற்று சூழலுக்கும் மரங்கள் பேருதவி செய்கின்றன.எனவே நம்மாலியன்ற வரையில் எவ்வளவு மரங்களை வளர்க்க முடியுமோ வளர்ப்போம்.

4) புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக விளங்கும் வாயுக்களை அதிக அளவில் வெளியிடும் குளிர்சாதனப் பெட்டிகள், மற்றும் AC  பயன்படுத்துவதை கூடுமான வரையில் தவிர்ப்போம்.

5) மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோம் .அனல் மின் நிலையங்கள் மற்றும் அணுமின் நிலையங்கள் சுற்றுசூழலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன .மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் மேற்கண்டவற்றின் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.

6) பயன் தரும் மரங்களை வெட்டாமல் பாது காப்போம். மனிதனால் அசுத்தமாக்கப் படும் காற்று மண்டலத்தை தூயமையாக்குபவை மரங்கள் என்பதை மறக்கவேண்டாம்.

7 ) சுற்று சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக் கருவேல மரங்கள் மற்றும் பார்த்தீனியம் செடிகளை அழித்தொழிப்போம்.

8) நீர் நிலைகள் மற்றும் தெருவோர வாறுகால்களை சுத்தமாக வைத்திருப்போம்.இதன் மூலம் கொடிய நோய்கள் பரவுவதைத் தடுக்கலாம் .

9 ) நிலத்தடி நீரை உறிஞ்சுவதைக் குறைத்து நிலத்தடி நீர் மிகுதியாக மழைநீர் சேகரிப்பு வசதிகளை வீடுகளில் ஏற்படுத்துவோம்.

10 ) மின்சாரத்தை அதிக அளவில் எடுத்துக்கொண்டு வெப்பத்தை அதிகரிக்கும் குண்டு பல்புகளுக்கு விடை கொடுத்துவிட்டு CFL பல்புகள் LED  பல்புகளை பயன்படுத்துவோம்.

நாம் நமது சந்ததிகளுக்கு சேர்த்து வைக்கும் மிகப்பெரும் சொத்து சுற்றுசூழல் பாதுகாப்புதான்.