12 அக்டோபர் 2011

அணுஉலை : மக்களின் அச்சத்தை போக்க எளிய வழி !

கூடங்குளம் அணு மின் நிலையத்தை     மூடவேண்டும் என்று கோரி நெல்லை ,
குமரி,தூத்துக்குடி மாவட்ட மக்கள்          மிகத்தீவிரமாக போராடி வருகிறார்கள் .
ஆனால்     அரசோ       மக்களின்    அச்சத்தை    போக்குவோம் என்று கூறுகிறது .
ஆனாலும் எவ்வாறு அச்சத்தை போக்குவது என்று அரசு முடிவெடுக்கத் திணறி வருகிறது .

ஏதோ என்னால் இயன்ற வரையில் அச்சத்தை போக்குவதற்குரிய சில வழிகளை சொல்கிறேன் .

அச்சம் 1 :அணு உலை செயல்பட ஆரம்பித்தால் அருகில் வசிக்கும் மக்களுக்கு  புற்று  நோய் வரும் .

அச்சத்தை போக்க : அணுமின் நிலையத்திலிருந்து 10  கிலோமீட்டருக்கு அப்பால் கட்டப்பட்டிருக்கும் ஊழியர் குடியிருப்பை 3  கிலோமீட்டருக்குள் கொண்டுவரவேண்டும் .பயத்தை போக்க விரும்பும் அதிகாரிகள் நிரந்தரமாக கூடங்குளம் பகுதியிலேயே குடியேறவேண்டும் .

அச்சம் 2 :மீன்களுக்கு கதிரியக்க பாதிப்பு ஏற்படும் என்பதால் அதை வாங்க யாரும் முன்வர மாட்டார்கள் .

அச்சத்தை போக்க : அணுமின் நிலையத்தில் பணிபுரிவோர் அனைவரும் இப்பகுதியிலிருந்து பிடிக்கப்படும் மீன்களையே வாங்கி உண்ணவேண்டும் .வியாபாரிகள் மீன்களை வாங்க மறுத்தால் அரசே மீன்களை கொள்முதல் செய்துவிட்டு அதற்குரிய விலையை மீனவர்களுக்கு வழங்கவேண்டும் .

அச்சம் 3 : அணு உலை வெடித்தால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் 

அச்சத்தை போக்க : அணுமின் நிலையத்திலிருந்து 50  கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் வசிக்கும் சுமார் 18 லட்சம் மக்களை 24  மணி நேரத்தில் பாதுகாப்பாக வெளியேற்றியும் உடனடியாக இவர்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் .இதை மூன்று முறை ஒத்திகையாக நிகழ்த்தி காண்பிக்கவேண்டும் .

இதுபோல இன்னும் சில அச்சங்களும் அதற்கு தீர்வுகளும் உள்ளன .

ஆனால் இந்த எல்லா அச்சங்களையும் எளிதாக போக்க ஒரு சிறந்த வழி உள்ளது .அது அணு உலையை உடனடியாக மூடிவிடுவதுதான் .

விஸ்வாமித்திரர் யாகம் செய்த இடத்தில் மீண்டும் யாகம் !

ராஜரிஷி பட்டம் பெறுவதற்காக விஸ்வாமித்திரர் யாகம் செய்ததாகவும் அதற்கு ராமரும் ,லக்ஷ்மணரும் காவல் புரிந்ததாகவும் அதற்கு இடையூறு செய்த தாடகையை ராமர் வதம் செய்ததாகவும் புராணங்கள் வாயிலாக தெரிய வருகின்றன .

அவ்வாறு யாகம் செய்ததாக கூறப்படும் இடம் திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி  அருகிலுள்ள தில்லை வனம் தோப்பில் அமைந்துள்ளது .உலகிலேயே விஸ்வாமித்திரருக்கு இங்கு மட்டும்தான் ஆலயம் அமைந்துள்ளது .

இவ்வாலயத்தில் நேற்று (11-10-2011)  ஒரு யாகம் நடத்தப்பட்டது .

யாகத்திற்கான நோக்கம் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி நடைபெறும் போராட்டம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக .

யாகத்தை கோயில் அர்ச்சகர் முத்துப்பட்டர் நடத்தினார் .கூடங்குளம் பகுதி மக்கள் பலர் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர் .சர்வமதத்தினரும் இதில் கலந்துகொண்டனர் .

 இவ்வாலயம் அணுமின் நிலையத்திலிருந்து 5  கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

11 அக்டோபர் 2011

கூடங்குளம் தொடர் போராட்டத்திற்கு காரணம் யார் ?உண்மை நிலவரம்

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது .இருப்பினும் அரசு தரப்பிலிருந்து மக்களுக்கு சாதகமாக உறுதியான பதில்கள் கிடைக்காததால் போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது .

இது மக்கள் போராட்டமாக இருந்தாலும் சில ஊடகங்களும் ,அணு உலை ஆதரவாளர்களும் இப்போராட்டம் மர்ம நபர்களால் தூண்டி விடப் படுகிறது என்று நடுநிலையாளர்களை திசை திருப்ப முயற்சி மேற்கொண்டு வருகின்றார்கள் .இப்போராட்டத்தில் கலந்துகொண்டவன் என்ற முறையில் உண்மை நிலவரத்தை உங்களுக்கு தருகின்றேன் .

கடந்த 11-9-2011 அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது .உண்ணாவிரதம் தொடங்கி 5  நாட்கள் கடந்த நிலையில் போராட்ட குழுவில் முக்கிய அங்கம் வகிக்கும் திரு உதயகுமார் உள்ளிட்ட போராட்டக்குழுவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தோரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டனர் .அத்திட்டத்தை உண்ணாவிரதமிருந்த 127  பேரிடமும் நாசூக்காக தெரிவித்தனர்.

ஆனால் அக்கணமே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தோர் போராட்டக் குழுவினரிடம் அணு உலையை மூடுவதற்கு முன்பாக எக்காரணம் கொண்டும் உண்ணாவிரதத்தை கைவிடமாட்டோம் என்று மிகவும் கண்டிப்பாக கூறிவிட்டனர் .

அன்றைய தினம் தமிழக அமைச்சரவைக் குழுவும் போராட்டக் குழுவினரை சந்திக்க தாலுகா தலை நகருக்கு வந்திருந்தனர் .அதே வேளையில் அமைச்சர் குழுவை சந்திக்க போராட்டக்குழுவினர் முடிவு செய்வதற்கு போராட்டத்திற்கு வந்திருந்த பல்லாயிரக் கணக்கானோர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர் .அதற்கு காரணம் சரியான முடிவு கிடைக்காமல் போராட்டக்குழுவினர் போராட்டத்தை முடித்துவிடக்கூடாது என்பதால்தான் .

அணு உலையை மூட அமைச்சர் குழு உறுதி கூறாவிட்டால் பேச்சு வார்த்தையை நிராகரித்துவிடுவோம் என்று போராட்டக்குழுவினர் பொதுமக்களிடம் உருதியளித்தபின்புதான் பேச்சு வார்த்தைக்கு பொது மக்களும் ,உண்ணாவிரதத்தில் ஈடு பட்டிருந்தோரும் அனுமதித்தனர் .

பலரும் நினைப்பது போல் உதயகுமாரோ ,அல்லது ஆயர்களோ போராட்டத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது .இதற்கு காரணம் அணு உலையை மூடுவதற்காக எதையும் இழக்கத் துணிந்துள்ள பல்லாயிரக்கணக்கான கூடங்குளம் பகுதி மக்கள்தான் .

இவர்களை மீறி போராட்டக்குழுவினர் ஒரு பாதகமான முடிவை எடுத்தால் அது அவர்களுக்கே பெரிய பாதகமாக முடியலாம் .இதன் காரணமாகத்தான் தற்போது மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கப்பட்டுள்ளது .

தற்போது இப்பகுதி மக்களின் மன நிலை அணு உலையை மூடுவதற்கு முன்பாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரக்கூடாது என்பதுதான் .

டிஸ்கி : கடந்த மாதம் நடை பெற்ற 11 நாள்  உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டதால் எனது உடல்நிலை கடும் பாதிப்புக்குள்ளானதால் மருத்துவர் அறிவுரைப்படி ஓய்வெடுத்து வருகிறேன் .

27 செப்டம்பர் 2011

மீண்டு (ம்) வருவேன் ....

11  நாள் உண்ணாவிரதத்தின் பின் விளைவுகளிலிருந்து மீண்டு (ம்) வருவேன் ....

நம்பிக்கையுடன் 
கூடல் பாலா

22 செப்டம்பர் 2011

காலவரையற்ற உண்ணாவிரதம் நிறைவு -போராட்டம் தொடர்கிறது

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் நடைபெற்று வந்த 127  பேரின் காலவரையற்ற உண்ணாவிரதம் இன்று காலை 11  மணியளவில் நிறைவு பெற்றது .எனினும் சாதகமான சூழ்நிலை வரும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப் பட்டுள்ளது .

கடந்த 11  நாட்களாக இடிந்தகரையில் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தோம் .நேற்று முதல்வருடன் நடந்த பேச்சு வார்த்தையில் அணு உலைக்கெதிராக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றவிருப்பதாக முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து உண்ணாவிரதம் வாபஸ் பெறப்படுவதாக போராட்டக்குழு அறிவித்தது .

அதன்படி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த 127  பேரின் உண்ணாவிரதத்தை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் திரு இவான் அம்புரோஸ் அவர்கள் பழச்சாறு கொடுத்து நிறைவு செய்தார் .எனினும் எஞ்சியுள்ள பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தை தொடர்கின்றனர் .

இப்போதிலிருந்து நடைபெறுகின்ற போராட்டங்கள் முற்றிலும் மத்திய அரசுக்கெதிராக அணு உலையை மூடக்கோரும் போராட்டமாக அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

எனது உடல்நிலை சாதாரணமாகவே உள்ளது .

அணு உலையை மூடும் வரையில் தமிழர்கள் அனைவரும் குரல் கொடுப்போம் .