பல வருடங்களாகவே காடுகளை அழிப்பதால் மழை குறைந்துவிட்டது என்றும் ,
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்றும் வாயாரப் பேசி வருகின்றோம். ஆனால்
பிரச்சினைக்கு தீர்வு காண பெரும்பாலானோர் முயற்சி செய்யாமலேயே இருக்கிறோம்.
நாம் ஒருவர் மட்டும் நினைத்தால் நாட்டை சோலைவனம் ஆக்கிவிட முடியுமா என்று
எண்ணியே பலரும் சோர்ந்து போய் உட்கார்ந்துவிடுகிறோம்.
ஆனாலும் ஆங்காங்கே
சில பெரிய உள்ளங்கள் பசுமை உலகம் படைத்தது வருகின்றனர். அரசுப் பேருந்து
நடத்துனராக இருக்கின்ற திரு யோகநாதன் அவர்கள் தனி மனிதராக 1 லட்சம்
மரங்கள் நட்டு சாதனை படைத்திருக்கிறார். அவர் பற்றிய தகவல்களை ஏற்கெனவே ஒரு
பதிவில் பகிர்ந்திருந்தேன்.
அழிந்து போன காடுகளை மீட்டிடும் நோக்கிலும்
மறைந்து போன மழையை வரவழைக்கும் நோக்கத்திலும் பசுமை விடியல் என்ற ஒரு
அமைப்பு உருவாக்கப் பட்டு அமைப்பின் மூலம் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள்
நடப் பட்டு வருகின்றன. திருமண விழாக்கள் போன்ற விழாக்களிலும் மக்களுக்கு
இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்த்தலை ஊக்கப் படுத்தி வருகிறது
இவ்வமைப்பு .
இது போன்ற காரியங்களில் அக்கறையுள்ள ஒவ்வொருவரையும் பசுமை
விடியல் அழைக்கிறது. நீங்கள் செய்யவேண்டியது மிகச் சிறிய விஷயம்தான் .
சூழலுக்கு நன்மை விளைவிக்கும் ஏதேனும் ஒரு மரக் கன்றை வாங்கி அதை உங்கள்
வீட்டிலோ அல்லது உங்களுக்கு மரம் வளர்க்க ஏதுவான பகுதியிலோ நட்டு அதை
மரம் நடுபவரோடு சேர்த்து புகைப் படம் எடுத்து பசுமை விடியலுக்கு அனுப்புங்கள்.
இது உங்களுக்கும்
சமுதாயத்திற்கும் நன்மை பயப்பது மட்டுமன்றி பசுமைக்கு வித்திடும் பசுமை
விடியல் அமைப்பாளர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையும்.
உங்கள் புகைப்
படங்களை விளக்கத்தோடு ( மரம் நடுபவரின் பெயர் மற்றும் முகவரி )
tree@pasumaividiyal.org என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உங்கள் படம்
பசுமை விடியல் தளத்தில் பிரசுரிக்கப் படும்.
பசுமை விடியலின் தளத்திற்கு
செல்ல இங்கே சுட்டுங்கள்.
பசுமை விடியலின் முகநூல் பக்கத்திற்கு செல்ல
இங்கே சுட்டுங்கள்.
இப்பதிவிற்கு நீங்கள் ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை
கமென்ட் போடாவிட்டாலும் பரவாயில்லை மரம் நட என்னால் இயலாது என்று மட்டும்
சொல்லிவிடாதீர்கள்.
வாருங்கள் நண்பர்களே பசுமை உலகம் படைப்போம்.





