23 ஏப்ரல் 2011

அணு சக்தி வேண்டவே வேண்டாம் :நோபல் அறிஞர்கள்

       சமாதானத்துக்கான நோபல் பரிசு வாங்கிய ஆர்ச் பிஷப் ட்ஸ்மாண்டு,ஜோஸ் ராமோஸ் மற்றும் பெண் நோபல் அறிஞர் ரிகோபெர்டா மேஞ்சு தும் உள்ளிட்ட 9 நோபல் அறிஞர்கள் கூட்டாக கையெழுத்திட்டு இந்தியா,சீனா உள்ளிட்ட அணு மின் நிலையங்களில் அதிக அளவு முதலீடு செய்து வரும் 31 நாடுகளுக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர் .
             அணுகுண்டு எத்தனை ஆபத்து என்பதற்கும் அணு உலைகள் எத்தனை ஆபத்து என்பதற்கு ஜப்பானை தவிர வேறு உதாரணம் தேவையில்லை .மரபு சாரா எரி சக்திகளை கொண்டு மின்சாரம் தயாரிக்க எத்தனையோ வழிகள் உள்ளன .அவற்றுக்கு ஆகும் செலவு அணுமின் நிலையங்களை விட  அதிகம்  என்றாலும் ஆபத்து இல்லாமல் உலக மக்கள் வாழலாம் .நம்மில் யாராவது நோய்க்கான மருந்தை குறைந்த விலையில் கிடைக்கும் என்று மட்டமான கடைகளுக்கு சென்று வாங்குவோமா?அதுபோலத்தான் மனித குலத்துக்கு ஆபத்து இல்லாமல் மின்சாரம் தயாரிக்க அதிக விலை கொடுப்பதில் தப்பில்லை .
          உலகம் முழுவதும் தற்போது இயங்கி வரும் சுமார் 400 அணு உலைகளிலிருந்து பெறப்படும் மிசாரத்தின் அளவு மொத்த மின்சாரத்தில் 7% மட்டுமே .எனவே இந்த நானூறு அணு உலைகளையும் அக்கு வேறு ஆணி வேறாக பிடுங்கி எறிவதில் உலகிற்கு எந்த பெரிய இழப்பும் இல்லை .அதே நேரம் நிகழ்கால சந்ததியும் நமது வருங்கால சந்ததியும் கதிரியக்க பேராபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும் .அணு உலைகளில் விபத்து நேராவிட்டாலும் கூட அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட கழிவுப்பொருட்களால் எதிர்காலத்தில் பேராபத்து உள்ளது என்பதை அனைத்து விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்கின்றனர் .மனித குலத்துக்கே அச்சுறுத்தலாக விளங்கும் இந்த அணு மின் நிலையங்களை மூடி அப்புறப்படுத்திவிட்டு ஆபத்தில்லாத முறையில் அனைத்து நாடுகளும் மின் உற்பத்தி மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிஞர்கள் விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளனர்  


                ஆனால் கற்பனைக்குகூட எட்டாத வகையில் கோடிகள் லாபம் சம்பாதிக்கும் அணுமின்  நிலையத்துக்கான சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்க்குமா என்பது சந்தேகமே .இந்நிறுவனங்கள் சாதாரண மக்களை மட்டுமன்றி ஒவ்வொரு நாட்டு நாடாளு மன்றங்களையே அணுவினால் ஆபத்தில்லை என்று ஆட்டி படைக்கும் வல்லமை மிகுந்தவை .இந்நிருவனங்களுக்கேல்லாம் சாதாரண மக்களின் உயிரின் அருமை தெரியாது .அவர்களின் ஒரே தாரக மந்திரம் பணம் பணம் பணம் .

கருத்துகள் இல்லை: